Wednesday, December 9, 2009

ஊழலை ஒழிக்க ஒன்றுபடுவோம்!


ன்று (டிச.9) ஊழலுக்கு எதிரான நாளாக ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டு உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. “வளர்ச்சியை ஊழல் கொன்று விட அனுமதிக்காதீர்கள்!’’ என்ற நோக்கத்துடன் இவ்வாண்டின் ஊழல் எதிர்ப்பு நாள் கடைப்பிடிக்கப்படுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
நாடும், நாட்டு மக்களும் வளர்ச்சி பெற முட்டுக்கட்டையாக இருக்கும் பல்வேறு காரணங்களுள் ஊழலும் ஒன்று. ஆயுதம் வாங்குவது முதல் சவப்பெட்டி வாங்குவது வரை அங்கிங்கெணாத படி எல்லாவற்றிலும் ஊழல் தலைவிரித்து ஆடி வருகிறது என்பது வெள்ளிடை மலையாகும்.
அண்மையில் மிக அதிக ஊழல் நடைபெறும் நாடுகள் பட்டியலை டிரான்°பரன்சி இன்டர்நேசனல் என்ற ஒரு சர்வதேச நிறுவனம் வெளியிட்டது. அதில் இந்தியா 84 வது இடத்தைப் பிடித்திருந்தது. நமக்கு முன்னால் 83 நாடுகள் உள்ளனவே, நமது நாடு கொஞ்சம் பரவாயில்லைதான் போலிருக்கிறது என்று யாரும் நினைத்து விடக் கூடாது. உண்மையில் இது மிக மோசமான நிலையாகும். இந்தப் பட்டியலை வெளியிட்ட அவ்வமைப்பின் தலைவர் ஆர்.எச்.டஹிலானி என்பவர், “வறுமைக்கும், ஊழலுக்கும் இடையே மிகவும் வலிமையான பிணைப்பு உள்ளது. இது உலக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது,’’ என்று கூறினார். அவரின் இக்கூற்றுக்கு ஆதாரமாக இந்தியாவையே எடுத்துக்கொள்ளலாம். அனைத்துக் குடிமக்களுக்கும் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு அளிப்பது உள்ளிட்ட மனிதவளம் சார்ந்த செயல்களை திருப்திகரமாக நிறைவேற்றும் நாடுகளின் பட்டியல் என்று வரும்போது இந்தியாவால் 100 வது இடத்திற்குள் கூட வர முடியவில்லை. மனிதவள அறிக்கையில் இந்தியாவின் தற்போதைய நிலை 134 என்பது குறிப்பிடத்தக்கது.

ஊழலைக் கட்டுப்படுத்தவும், தவறு செய்தவர்களை தண்டிக்கவும் பல்வேறு சட்டங்கள் உள்ளன. இருந்த போதிலும் தவறு செய்தவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதில்லை; அவ்வாறு நிறுத்தப்பட்டாலும் தண்டிக்கப்படுவதில்லை.
எனவே ஊழலை ஒழிக்க ஆட்சியாளர்கள் உறுதியான நிலை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வலியுறுத்துகின்றன. ஆனால் அவற்றை அவர்கள் குறைந்தபட்சம் காதிலாவது போட்டுக் கொள்கிறார்களா என்பது சந்தேகமே. சட்டத்தின் பிடியில் அகப்படாமல் சுதந்திரமான மனிதர்களாக உலா வரும் எத்தனையோ பேரை உதாரணமாகக் காட்ட முடியும். சட்டத்தின் ஆட்சியை நிறைவேற்றும் பொறுப்பில் உள்ள நீதிபதிகள் கூட இதற்கு விதிவிலக்கில்லை என்பது கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.தினகரன் விஷயத்தில் இருந்து தெளிவாகிறது. ஆயுதம் வாங்குவதில் நடந்த மிகப்பெரிய முறைகேடான போபர்° ஊழல் வழக்கில் முக்கியக் குற்றவாளியான இத்தாலியைச் சேர்ந்த ஒட்டாவியோ குவாத்ரோச்சி பல்லாண்டுகளாக சிபிஐ யால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக இருந்தார். ஆனால் தற்போது அவர் மீதான வழக்குகளை அற்பத்தனமான காரணங்களைக் கூறி சிபிஐ திரும்பப் பெற்று விட்டது. இதேபோல் முத்திரைத்தாள் ஊழல், சவப்பெட்டி ஊழல் ஆகியவை சில காலங்களுக்கு முன்பு நாட்டையே உலுக்கின. அவ்வழக்குகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை. தற்போது 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான °பெக்ட்ரம் ஊழல் முன்னுக்கு வந்துள்ளது. இதற்குக் காரணமான மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட யாரும் இன்னும் குற்றவாளிகளாகக் கூட அடையாளம் காட்டப்படவில்லை. வெறும் அரசியல் விளையாட்டுதான் இதுவிஷயத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இவை குறித்து எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் ஆட்சியாளர்கள் பதிலளிக்கும் மனநிலையில் இல்லை. கேட்டால் கேட்டு விட்டுப் போங்கள் என்பது போல் அவர்கள் கள்ள மவுனம் சாதிக்கிறார்கள்.
ஆனால் இவை மட்டும்தான் ஊழல் என்பதில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய தேவை உள்ளது. தற்போது நடைபெற்ற தேர்தலில் நடந்த முறைகேடுகளும் ஊழல் வகையைச் சேர்ந்தவைதான். வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது முதல், விளம்பரம் என்று குறிப்பிடாமல் பத்திரிகைகள் மூலம் விளம்பரம் தேடிக் கொண்டது வரை ஒவ்வொன்றும் ஊழல்தான்.
அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி தற்போது விண்வெளியையும் தாண்டிப் பறந்து கொண்டிருக்கிறது. இத்தகைய வரலாறு காணாத விலையுயர்வுக்குக் காரணமான ஊக வணிகம், முன்பேர வர்த்தகம் என்ற பல்வேறு பெயர்களில் செய்யப்படும் வர்த்தகங்களை அனுமதிப்பது கூட ஒரு வகையில் ஊழல்தான். மேலும் பதுக்கல்காரர்களுக்கும், கள்ளச்சந்தை வியாபாரிகளுக்கும் வசதியான நிலைகளை உருவாக்கி வைத்திருப்பதும் ஊழல்தான்.
இவையெல்லாவற்றையும் எப்போது ஆட்சியாளர்கள் கட்டுப்படுத்துகிறார்களோ அப்போதுதான் ஊழல் என்ற கொடிய நோய் நாட்டை விட்டு அகலும். மேலும் அந்நிலை சாத்தியமாவதற்கு நடைமுறையில் உள்ள பொருளாதாரக் கட்டமைப்பிலும் மாற்றம் ஏற்பட வேண்டிய தேவை உள்ளது. ஆனால் இவற்றை ஆட்சியாளர்கள் தாமாகச் செய்ய மாட்டார்கள். மக்கள் போராட்டங்கள்தான் சாத்தியமாக்கும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம்:



ஊழலைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவில் இயற்றப்பட்ட சட்டங்களுள் மிக முக்கிய சட்டமாக இருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆகும். கடந்த 2005 ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இச்சட்டம், இடதுசாரிகளின் தொடர்ச்சியான வற்புறுத்தல்களால்தான் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, December 1, 2009

போபால் பேரழிவை நினைவு கூர்வோம்!


(உலகையே உலுக்கிய போபால் விஷவாயு பேரழிவு நிகழ்ந்து 25 ஆண்டுகள் முடிவடைந்து விட்டன. இக்கொடூர சம்பவத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து அண்மையில் புது தில்லியில் நடந்த சர்வதேச கம்யூனி°ட் கட்சிகளின் மாநாடு விவாதித்தது. அதன் தீர்மானத்தில் இருந்து...)


1984 ம் ஆண்டு டிசம்பர் 2,3 ஆகிய நாட்களில் போபால் பேரழிவு ஏற்பட்டது. உலகில் தொழிற்சாலைகளால் நிகழ்ந்த பேரழிவுகளில் குறிப்பிடத்தக்கதாகக் கருதப்படும் அந்தப் பேரழிவில் சிக்கி 20 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மிக மோசமான பாதிப்புகளுக்கு உள்ளாகினர்.
ஆனால் அந்த கோரச்சம்பவம் நிகழ்ந்து 25 ஆண்டுகள் உருண்டோடி விட்டபோதிலும் பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வில் அரசு போதிய அக்கறை செலுத்தாததால் இன்றும் அந்தப் பேரழிவின் பாதிப்புகள் உணரப்படுகின்றன. அந்த மக்களுக்கு போதிய மருத்துவ வசதிகளை அரசு செய்து தரவில்லை. மேலும் அவர்களது இழந்த வாழ்வை மீட்கத் தேவையான நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. இதனால் அவர்களது வாழ்வில் துன்பம் தொடர்கதையாகியுள்ளது. அத்துன்பங்களைப் போக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அதே சமயத்தில் இந்தியாவிலோ அல்லது மற்ற வளரும் நாடுகளிலோ மீண்டும் இதுபோன்ற துயர சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும் என்பதும் முக்கியமாகும். இதனால் போபால் சம்பவம் எடுத்துக்காட்டியிருக்கும் பிரச்சனைகள் குறிப்பாக ஏகாதிபத்தியத் தன்மை வாய்ந்த உலகமயமாக்கலும், புதிய தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளும் ஆதிக்கம் செலுத்தும் இந்தச் சூழ்நிலையில் என்றென்றும் மறக்கக்கூடாதவையாகும்.
இந்த பேரழிவுக்குக் காரணமான தொழிற்சாலையான யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்தின் பயங்கர குற்ற முகம் அது அமெரிக்காவின் மேற்கு விர்ஜீனியா மாகாணத்தில் நடத்தி வந்த ஆலையைப் பார்த்த போது தெரியவந்தது. அங்கு இருந்த பல பாதுகாப்பு வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் போபால் நகரில் அந்நிறுவனம் நடத்திய பேரழிவுக்குக் காரணமான ஆலையில் இல்லை. போபால் விஷவாயு கசிவுக்குப் பின் யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன் நிறுவனம் டவ் கெமிக்கல்° என்ற ஆலையால் விலைக்கு வாங்கப்பட்டது. ஆனால் அந்நிறுவனம் இந்திய அரசுடனும், யூனியன் கார்பைடு நிறுவனத்துடனும் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு- உயிரிழந்தவர்களுக்கு 1200 அமெரிக்க டாலர்கள்(அன்றைய மதிப்பில்), உடல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 550 டாலர்கள் என்று- மிகச்சிறிய தொகையை இழப்பீடாக வழங்கியது. அப்போது யூனியன் கார்பைடு நிறுவனத்தின் மீதான கிரிமினல் குற்றச்சாட்டுகளை திரும்பப்பெற வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்கு இந்திய அரசு பணிந்தது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் முற்போக்கு சக்திகள் மேற்கொண்ட தொடர்ச்சியான போராட்டங்களே இந்தியாவில் யூனியன் கார்பைடு நிறுவனம் மீதான வழக்குகள் மீண்டும் நடத்தப்படக் காரணமாகும். இருந்த போதிலும், இச்சம்பவத்திற்கு மிக முக்கிய காரணமாக இருந்த குற்றவாளியான அப்போதைய யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டர்சன் இதுவரை இந்தியாவிடம் சரணடையவில்லை. அவர் மீதான குற்றத்தை இந்திய நீதிமன்றங்கள் உறுதிப்படுத்தி, பகிரங்கமாக குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு விட்ட போதிலும் அவரை அமெரிக்கா இன்று வரை பாதுகாத்து வருகிறது.
குற்றம் செய்த யூனியன் கார்பைடு நிறுவனம் இவ்வாறு சட்டத்தில் இருந்து தப்பியுள்ள வேளையில் அதைப் பின்னர் கைப்பற்றிய டவ் கெமிக்கல்° நிறுவனம், பொது மக்களைக் காட்டிலும் பகாசுர கார்ப்பரேட் நிறுவனங்களைப் பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்ட தவறான நிறுவனச் சட்டங்கள் காரணமாக தன்னைப் பாதுகாத்துக் கொண்டுள்ளது. ஆனால் இந்தக் குறைவான அபராதங்கள் கூட அமெரிக்காவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவுடனான அணு உடன்பாட்டை செயல்படுத்துவதில் மும்முரமாக இருக்கும் அமெரிக்கா போபால் சம்பவத்தை குறிப்பாக கோடிட்டுக்காட்டி, எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நிகழ்ந்தால் அது அமெரிக்க நிறுவனங்களை பாதித்து விடக்கூடாது என்று கூறி குறைவான சட்டக்கட்டுப்பாடு கொண்ட ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்று இந்தியாவை நிர்ப்பந்தித்து வருகிறது.
இந்த சங்கிலித்தொடர் நிகழ்வுகள் உலக முதலாளித்துவத்தின் உண்மையான முகத்தை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளன.
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை மையமாகக் கொண்ட பகாசுர பன்னாட்டு நிறுவனங்கள் தற்போது வளரும் நாடுகளில் கட்டுப்பாடற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அவை தொழிற்சாலை பாதுகாப்பு, பாதிப்பு ஏற்படுத்தும் விஷத்தன்மை வாய்ந்த வேதிப்பொருட்கள், சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவை தொடர்பான சர்வதேச மற்றும் உள்நாட்டு சட்டங்களை வெளிப்படையாக மீறி வருகின்றன. அபாயம் நிறைந்த தொழிற்சாலைகள், பாதிப்பை ஏற்படுத்துவதும், தரமற்றதுமான தொழில்நுட்பங்கள், தடை செய்யப்பட்ட அல்லது மிக அதிக நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருட்கள் ஆகியவற்றை பயன்படுத்தி வருவதன் மூலம் அவை இச்சட்டங்களை வெளிப்படையாக மீறி வருகின்றன. வளரும் நாடுகள் சொந்தமாக தொழில்நுட்பங்களை உருவாக்கும் திறன் பெற்றுள்ள போதிலும் வளர்ந்த நாடுகளால் அவ்வாறு செய்வதிலிருந்து தடுக்கப்படுகின்றன. பாதிப்பை ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் இவ்வாறு வளரும் நாடுகள் மீது திணிக்கப்படுகின்றன. ஐஎம்எப், உலக வங்கி மற்றும் அது போன்ற நிறுவனங்களின் நிர்ப்பந்தத்தால் வளரும் நாடுகள் அமல்படுத்தி வரும் புதிய, தாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக ஒரு பன்னாட்டு நிறுவனம் சட்டத்தை மீறுகிறது என்று தெரிந்தாலும் அவற்றின் மீது அந்நாட்டால் நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. பன்முகத்தன்மை வாய்ந்த காட் மற்றும் உட்டோ போன்ற பொருளாதார உடன்பாடுகள் மூலமும் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் கூட்டாளிகள் வளரும் நாடுகளைக் கட்டுப்படுத்தி வருகின்றன.
தொழிற்சாலைகளின் உரிமம், பாதிப்பை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளைக் கட்டுப்படுத்துதல், தொழில்நுட்பங்களில் சுய சார்பான தன்மை, இறக்குமதி செய்யும் தொழில்நுட்பங்கள் குறித்த கொள்கை மற்றும் கட்டுப்படுத்தும் கட்டமைப்புகளை உருவாக்கும் தேவை, பன்னாட்டு நிறுவனங்களின் பாத்திரத்தை தீர்மானித்தல், தொழிற்சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதிக்காமல் நிறுவனங்கள் செயல்படுவதை உறுதிப்படுத்தவுமான சட்டங்களை இயற்றி அவற்றை நடைமுறைப்படுத்துவது, நகர மேம்பாடு, தொழிற்சாலைகளுக்கான சரியான இடங்களைத் தேர்ந்தெடுத்தல், விவசாயக் கொள்கைகளைத் தீர்மானித்தல் போன்ற பல்வேறு விஷயங்களை போபால் சம்பவம் உலகின் முன்பு கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில் பன்னாட்டு நிறுவனங்களின் செயல்பாடுகள், ஏகாதிபத்திய நாடுகள் வளரும் நாடுகள் மீது திணிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் தொழில்நுட்பங்கள், இன்றைய ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் நிலைக்குக் காரணமான புதிய தாராளவாத பொருளாதாரக் கொள்கைகள் ஆகியவை குறித்து குறித்து உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையில், உலக கம்யூனி°ட் கட்சிகள் உலகெங்கிலும் உள்ள அனைத்து முற்போக்கு சக்திகளையும் போபால் விஷவாயு சம்பவத்தின் நினைவு நாளை கடைப்பிடிக்குமாறு அறைகூவி அழைக்கின்றன.

Saturday, November 28, 2009

வெள்ளை யானையும் அதன் குட்டியும்!


அவர்கள் இருவரும் அந்த ஊரிலேயே மிகவும் பிரபலமான பொய்யர்கள். ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்ற வகையில் அவர்கள் அவிழ்த்து விடும் பொய்களால் அந்த ஊரே அல்லோலகல்லோலப்பட்டுக்கொண்டிருந்தது.
ஒருநாள் அவர்களில் ஒருவன் ஒன்றுமில்லாத ஒரு வெட்டவெளியைக் காட்டிக் கூறினானாம்: ‘‘அதோ பார் வெள்ளை யானை போகிறது,’’ என்று. சுற்றியிருந்தவர்கள் திருதிரு வென்று விழித்துக் கொண்டிருக்கையிலேயே மற்றவன் கூறினான்: “ஆமாம், ஆமாம் அதன் குட்டியும் போகிறது!’’
இது முன்பொரு காலத்தில் நடந்த கதையல்ல. வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் மீண்டும், மீண்டும் தொடர்ந்து நடந்து வரும் கதைதான். ஆனால் ஒரே ஒரு சின்ன வித்தியாசம்: ஒவ்வொரு முறையும் வெட்டவெளியில் யானைக்கு பதிலாக வேறொன்று தோன்றுகிறது. இந்த முறை தோன்றியிருப்பது ‘லவ் ஜிஹாத்’.
அது என்ன லவ் ஜிஹாத்?
உருது மொழியில் ஜிஹாத் என்றால் போராட்டம் என்று பொருள். இ°லாமிய மதத்தின் இழந்த பெருமையை மீட்பதற்காக போர் செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டு, அம்மதத்தில் உள்ள மிகச்சிலர் செய்யும் வன்முறை வெறியாட்டங்கள் இந்தப்பெயரால் குறிப்பிடப்படுகின்றன. இதனை புனிதப்போர் என்றும் அவர்கள் அழைப்பதுதான் கொடுமையானது. சரி இதற்கும் ‘லவ்’வுக்கும் என்ன சம்பந்தம்? இவை இரண்டையும் ஏன் ஒன்றாக இணைக்க வேண்டும்? இதன் பொருள் என்ன?
இதுபோன்ற கேள்விகளை எழுப்பி யாரும் மண்டையைப் போட்டு உடைத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் இது துவேஷம் கொண்ட இந்துத்துவா கும்பலின் வெறிபிடித்த பழைய கூச்சல்தான். ‘அதிகமாகக் குழந்தைகள் பெற்றுக் கொள்வதன் மூலம் இந்திய இ°லாமியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது’,என்றும், ‘இதன் மூலம் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவை அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்கள்’, என்றும் அவர்கள் செய்து வரும் வக்கிரமான பிரச்சாரம்தான் இப்போது இந்தப் பெயரில் புதிய உருவெடுத்திருக்கிறது. இலாபவெறி கொண்ட ஊடகங்களால் இது ஊதிப் பெரிதாக்கப்படுகிறது: அவ்வளவுதான். இதுவரை இ°லாமியக்குடும்பங்களை இவ்வாறு தூற்றியவர்கள் இப்போது இந்துப்பெண்களுக்கு ஆபத்து என்று கிளம்பியிருக்கிறார்கள்.
அழகான இ°லாமிய இளைஞர்கள் இந்துப்பெண்களை முதலில் காதல் வலையில் வீழ்த்துவார்களாம். பின்னர் அவர்களை மதம் மாற்றி திருமணம் செய்து கொள்வார்களாம். இதன் முக்கிய நோக்கம் இந்தியாவில் இ°லாமியர்களின் தொகையை உயர்த்துவதுதானாம். ஏராளமான குழுக்கள் இந்நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும்,இதற்கு ஏராளமான பணம் செலவிடப்படுவதாகவும் சிறிதும் இடைவெளியின்றி அவர்கள் அடுக்கிக்கொண்டே போகிறார்கள்.
முதலில் இந்த அபத்தம் கேரள பத்திரிகை ஒன்றில் புலனாய்வு என்ற பெயரில் வெளியானதாகத் தெரிகிறது. இதையடுத்து அங்கு இயங்கி வரும் ‘இந்து ஜனஜக்ருதி சமிதி’ என்ற மதவெறி அமைப்பு இதைக் கையில் எடுத்துக்கொண்டது. பின்னர் கர்நாடகத்திலும் இதுபோன்று நடப்பதாகக் கூறி தென் கர்நாடக இந்துத்துவா கும்பல்களும் இதை ஒரு பிரச்சனையாகக் கையிலெடுத்தன. ஆயிரக்கணக்கான இந்துப் பெண்கள் இவ்வாறு இஸ்லாமுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், உடனடியாக அரசு இதில் தலையிட வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். இவர்களின் கோரிக்கையை(?) ஏற்று கேரள, கர்நாடக உயர் நீதிமன்றங்களும் இதுகுறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளன.
இந்நிலையில் இது ஆதாரமற்ற ஒரு வதந்தி என்று கேரள காவல்துறை டி.ஜி.பி மறுப்பு தெரிவித்தார். எந்தப் பெண்ணும் பாதிக்கப்பட்டதாக தகவல் இல்லை என்று அவர் கூறினார். கர்நாடக காவல்துறையும் இது வதந்திதான் என்று தெரிவித்துள்ளது. இதற்கு ஆதாரமாக அவர்கள் சில புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளனர்.
தெற்கு கர்நாடகத்தில் மட்டும் கடந்த சில மாதங்களில் 3 ஆயிரம் இந்துப் பெண்கள் காணாமல் போயுள்ளதாகவும், மாநிலம் முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்றும் இந்து ஜனஜக்ருதி சமிதி தெரிவித்திருந்தது. இதனைச் சுட்டிக்காட்டியுள்ள கர்நாடக காவல்துறை அதிகாரிகள் கடந்த செப்டம்பர் மாத இறுதி வரை காணாமல் போன பெண்கள் வெறும் 404 பேர்தான் என்றும், அதிலும் 332 பேர் கண்டுபிடிக்கப்பட்டு விட்டார்கள் என்றும் கூறியுள்ளனர். இன்னும் 57 பேரின் விவரங்களைத்தான் தேட வேண்டியுள்ளது. இதிலும் இந்து அமைப்புகள் கூறுவது போல் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். மனதுக்குப் பிடித்தவர்களுடன் சேர்ந்து வாழ வீட்டை விட்டுச் சென்ற பெண்களைப் பொறுத்தவரை (1) அவர்கள் இந்துக்கள் அல்லாதோருடனும் சென்றிருக்கிறார்கள், (2) இந்துக்களுடனும் சென்றிருக்கிறார்கள். (3) இந்துப்பெண்களும் காணாமல் போயிருக்கிறார்கள், (4) இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த பெண்களும் காணாமல் போயிருக்கிறார்கள்.
மேலும் இதுபோன்று காணாமல் போன ஒரு பெண் இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு தொடர் கொலைகாரனால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 22 வயதான அப்பெண் அவனால் கொலை செய்யப்பட்ட 27 வது நபர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த ஆதாரங்கள் லவ் ஜிஹாத் என்று இந்து மதவெறியர்கள் கூறிவருவது வெறும் கற்பனையே என்று தெளிவுபடுத்தியுள்ளன. இருந்தும் இதுகுறித்த வழக்குகளை விசாரித்த கேரள, கர்நாடக உயர்நீதிமன்றங்கள் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளன. விசாரிப்பதில் தவறில்லை. ஆனால் இதுபோன்ற மதவெறியர்களின் பொய்மையில் நீதி மயங்கியதால்தான் நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவும் சேதுசமுத்திரத்திட்டம் கூட இன்னும் கனவாகவே நீடிக்கிறது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

Friday, November 27, 2009

ஹங்கேரியில் அம்பேத்கர்!


சுதந்திரம் கிடைத்து 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்ட போதிலும் இந்தியாவில் இன்னும் தீண்டாமைத்தீ அணையவில்லை. கீழவெண்மணிகளும், திண்ணியங்களும், கயர்லாஞ்சிகளும் தீண்டாமைக் கொடுமையின் உச்சகட்டத்தைக் காட்டின. உத்தப்புரங்களும், செட்டிப்புலங்களும் அந்த அவலத்தின் மிச்ச சொச்சங்கள் இன்னும் துடைத்தெறியப்படவில்லை என்பதை உணர்த்துவனவாக உள்ளன. தலித் மக்களின் வாழ்நிலை இன்னும் மோசமாகவே உள்ளது. அவர்களின் வாழ்நிலையை மேம்படுத்துவதற்கான போராட்டங்களும் மார்க்சி°ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் முற்போக்கு சக்திகளால் தீவிரமாக முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.
இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரியில் வாழும் ரோமர்கள்(சுடிஅயள) என்ற ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் உரிமைக்கான போராட்டங்களை அம்பேத்கரிய முறையில் நடத்துவதாகக் கூறுகின்றனர். ஜிப்சி மக்கள் என்று அழைக்கப்படும் ரோமர் இன மக்கள் வட இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்களாவர். ஐரோப்பிய நாடுகளில் இந்திய தலித் மக்களைப் போன்றே கடுமையான ஒடுக்குமுறைகளுக்கும், சுரண்டலுக்கும் இவர்கள் ஆட்பட்டு வருகிறார்கள். பொதுவாக நாடோடி வாழ்க்கைமுறையை மேற்கொண்டிருந்த ரோமர் இன மக்கள் ஐரோப்பாவின் முக்கிய சிறுபான்மையினராவர். உலகம் முழுவதும் சுமார் 1.2 கோடி ரோமர்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் ஐரோப்பாக் கண்டத்தில் மட்டும் 80 லட்சம் பேர் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மிக முக்கிய சிறுபான்மையினராக இருந்த போதிலும் அவர்கள் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளைக் கூட பெற முடியாமல் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். ஆதிக்கம் நிறைந்த ஐரோப்பிய வெள்ளை இனத்தவரின் இன ரீதியான கொடுமைகளும், காரணமற்ற வெறுப்புகளும் தொடர்கதையாக உள்ளதாகக் கூறுகிறார்கள்.
ஹங்கேரி நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ரோமர் இன மக்களின் பங்கு 7 சதவிகிதமாகும். அங்கும் புறக்கணிப்புகளும், ஒடுக்குமுறைகளும் மட்டுமே இவர்களுக்கு பரிசாகக் கிடைக்கின்றன. அந்நாட்டின் சஜோகாசா(ளயதடிமயணய) என்ற கிராமத்தில் வசிக்கும் பாதிப்பேர் ரோமர்கள்தான். ஆனால் அவர்கள் நமது தலித் மக்கள் போன்று கிராமத்தின் வெளிப்பகுதியில் இருக்கும் சேரி போன்ற பகுதிகளில்தான் வசிக்க வேண்டியுள்ளது. மற்ற இனத்தவருடன் சேர்ந்து இல்லாமல் பிரத்யேகக் குடியிருப்புகளிலேயே வசிக்கின்றனர். அந்த குடியிருப்புகளுக்கு அருகில் குடிநீர்க் குழாய்கள் இல்லை; தெருவிளக்குகள் இல்லை; அதேபோல் முறையான சாக்கடை வசதிகளும் இல்லை. ஆனால் அதற்கு அடுத்தாற்போல இருக்கும் ஐரோப்பியக் குடியிருப்புகளில் அனைத்து வசதிகளும் உள்ளன. ஒரு காலத்தில் அருகில் உள்ள சுரங்கங்களில் பெரும்பாலான ரோமர் இன மக்கள் பணியாற்றி வந்ததாகவும், ஆனால் இப்போது யாருக்கும் வேலையில்லை என்றும் அவர்கள் ஆதங்கத்துடன் கூறுகின்றனர். அரசு தரும் சிறிய அளவிலான உதவித்தொகையைக் கொண்டே வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இன்னும் ரோமர் இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் தனி வகுப்பறைகளில் இருந்துதான் கல்வி கற்க வேண்டியுள்ளது. மேலும் பல இடங்களில் அவர்களுக்கு என்று தனிப்பள்ளிகளே இயங்கி வருகின்றன. இந்த தனிப்பள்ளிகளில் உள்ள வசதிகள் பற்றி கூற வேண்டியதில்லை. மற்ற ஐரோப்பியர்கள் படிக்கும் பள்ளிகளுடன் ஒப்பிடுகையில் அவற்றில் வசதி குறைவாகவே உள்ளது. மேலும் அங்குள்ள தேவாலயங்களில் ரோமர்களுக்கு அனுமதியில்லை. இவை அம்மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைப் போக்கில் இந்திய தலித் மக்கள் போன்றே இன்னல்களைச் சந்தித்து வருவதை உணர்த்துவனவாக உள்ளன.
இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அம்மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஹங்கேரி நாடாளுமன்ற உறுப்பினரான டெர்டாக் டைபர் என்பவர் ரோமர் இனத்தைச் சேர்ந்தவராவார். சமூகவியலாளருமான அவர் தங்கள் இன மக்களின் வாழ்நிலையை மாற்றுவதற்கான போராட்டங்களில் முன்னிலையில் இருக்கிறார். தங்கள் இன மக்கள் சந்திக்கும் ஒடுக்குமுறைகள் பற்றி அவர் இவ்வாறு கூறுகிறார்:
“கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஹங்கேரியப் பள்ளிகளில் ரோமர் இன மாணவர்களுக்கு தனி டம்ளர்களும், தட்டுக்களும் இருந்தன. பெரும் போராட்டத்திற்குப் பின்னரே அம்முறை ஒழிக்கப்பட்டது. எங்கள் பிள்ளைகள் இனவெறி காரணமாக தொடர்ச்சியான அவமானங்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும், புறக்கணிப்புக்கும் ஆளாகி வருகின்றனர். மனரீதியில் வளர்ச்சியடையாதவர்கள் என்று கூறி தனிப்பள்ளிகளுக்கு அனுப்பப்படுகின்றனர். ஹங்கேரியில் இயங்கி வரும் இதுபோன்ற தனிப்பள்ளிகளில் பயிலும் 90 சதவிகித மாணவர்கள் ரோமர் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். மாணவர்கள் மட்டுமே புறக்கணிக்கப்படுவதில்லை. கடந்த 2003 ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் ரோமர் இனப் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள தனி பிரசவ வார்டுகளும் (ஜிப்சி ரூம் என்ற பெயரில்) உள்ளன என்பது தெரிய வந்தது’’.
இவ்வாறு கூறும் டைபர் கடந்த 2005 மற்றும் 2007 ம் ஆண்டுகளில் இந்தியா வந்துள்ளதாகக் கூறுகிறார். மகாராஷ்டிர மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்த அவர் இந்திய தலித் மக்களின் நிலையுடன் தங்கள் நிலை ஒத்துப்போவதாகக் கூறுகிறார். மேலும் தலித் மக்களின் விடுதலைக்காக போராடிய அம்பேத்கரின் கொள்கைகள் (குறிப்பாக அம்பேத்கரின் புத்தமதக் கொள்கைகள்) தங்களை ஈர்த்துள்ளதாகவும் கூறுகிறார். இவரும் மற்றொரு ரோமர் இனத் தலைவர் ஓர்சோ° ஜானோ° என்பவரும் தற்போது அம்பேத்கரிய வழியில் தங்களது உரிமைக்கான போராட்டங்களை நடத்தி வருவதாகக் கூறுகின்றனர்.
ரோமர் இன மக்கள் சந்திக்கும் ஒடுக்குமுறைகளின் உச்சகட்டம் ஏற்கனவே பொதுப்புத்தியில் பதிய வைக்கப்பட்ட எண்ணங்களாகும். ஜிப்சி இன மக்கள் குறித்து ஏராளமான வதந்திகள் மற்றும் தவறான கருத்துகள் ஐரோப்பாவில் பரப்பப்பட்டுள்ளன. ரோமர்கள் அல்லது ஜிப்சி மக்கள் என்றாலே அவர்கள் கண்டிப்பாக பிறரை ஏமாற்றுபவர்களாகத்தான் இருப்பார்கள் என்றும், திருடர்கள், வழிப்பறி செய்பவர்கள், நாடோடிகள், பிச்சைக்காரர்கள், அழுக்கான சூழ்நிலையில் வாழும் மக்கள் என்று ஒரு எண்ணம் மக்கள் மத்தியில் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொள்பவர்களுக்கு வழிகாட்டுவதாகக் கூறும் இணையதளங்களும் “ஜிப்சி மக்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்!’’ என்று கூறத் தவறுவதில்லை. இத்தனை இன்னல்களையும் எதிர்த்துப் போராட வேண்டிய கட்டாயத்தில்தான் அவர்கள் உள்ளனர்.
ஆதாரம்: தி இந்து (நவ.22,2009)

விபத்தில்லா போக்குவரத்து!

போக்குவரத்து என்றாலே அதில் விபத்துகள் ஏற்படுவது இயல்பு. சாலையாக இருந்தாலும், ரயில்வே தண்டவாளமாக இருந்தாலும், வான்வெளியாக இருந்தாலும் விபத்துகளின்றி அவற்றை கற்பனை செய்வது அரிது. அதிலும் சாலைகள் விபத்துகளின் உறைவிடமாக உள்ளன. வளர்ந்த நாடுகள் ஓரளவு சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தியுள்ளன என்றாலும், வாகனப்போக்குவரத்து நிறைந்த இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சாலை விபத்துகளால் உயிரிழப்போர் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. எனவே விபத்தில்லா போக்குவரத்து என்றால் கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கும்.
எறும்புகளின் அணிவகுப்பை பொறுமையாக அமர்ந்து எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? அவை எப்படி முட்டல், மோதல் எதுவும் இல்லாமல் ஒரே நேர்கோட்டில் செல்கின்றன? உண்மையில் அவை விபத்தில்லாமல்தான் செல்கின்றனவா? அது எப்படி அவற்றிற்கு சாத்தியமாகிறது? ஒருவேளை அவை போக்குவரத்துக்கு விதிமுறைகள் ஏதாவது வகுத்து அதன்படி செயல்படுகின்றனவா? நமக்கிருக்கும் பரபரப்பான வேலைகளுக்கு மத்தியில் இத்தனையையும் நம்மால் யோசிக்க முடியாதுதான். ஆனால் இதற்கும் மேலான பல்வேறு கேள்விகளுக்கு உயிரியல் ஆர்வலர்கள் விடை கண்டுள்ளனர். அவை வியப்பையும், பிரமிப்பையும் ஏற்படுத்துவனவாக உள்ளன.
எறும்புகள் எதனால் வரிசையாக ஊர்ந்து செல்கின்றன? போக்குவரத்தில் சிக்கல்கள் ஏற்படாமல் அவை செல்லக் காரணம் என்ன? முதல் கேள்விக்கு விடை சொல்வது எளிது. எறும்புகளின் உடலில் சுரக்கும் பெர்மோன்(phermone) என்ற ஒரு வித வேதிப்பொருள் அவை வரிசையாக ஊர்வதை சாத்தியமாக்குகிறது. முன்னால் செல்லும் எறும்பு விட்டுச் செல்லும் அந்த வேதிப்பொருளைப் பின்னால் செல்லும் எறும்புகள் பின்பற்றிச் செல்வதால் அவை நேர்கோட்டில் செல்வது சாத்தியமாகிறது. எனவே இரண்டாவது கேள்விதான் ஆய்வுக்குரியது.
ஒவ்வொரு எறும்புக்கூட்டத்திலும் வேகமாக இயங்கும் எறும்புகள், மெதுவாக இயங்கும் எறும்புகள், சராசரி வேகத்தில் செல்பவை என்று 3 வகைகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அவற்றின் உடல் நீளத்தை வைத்து வேகம் அளவிடப்படுகிறது. மெதுவாகச் செல்பவை வினாடிக்கு 2 உடல் நீள அளவுக்கும், வேகமாகச் செல்பவை வினாடிக்கு 6 முதல் 10 உடல் நீள அளவுக்கும், சராசரி வேகத்தில் செல்பவை 4.7 உடல்நீள அளவுக்கும் செல்கின்றன என்று கூறும் ஆய்வாளர்கள், வரிசை என்று வரும்போது முன்னால் மற்றும் பின்னால் வரும் சக எறும்புகளுக்கேற்ப ஒவ்வொரு எறும்பும் தனது வேகத்தைத் தீர்மானிக்கிறது என்கிறார்கள். எனவே தறிகெட்ட இயக்கம் எதுவும் இல்லாமல் ஒரே சீராக எறும்புகளால் பயணிக்க முடிகிறது. உண்மையில் எறும்புகளின் இந்தப் பண்பு மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டியதாகும். ஏனெனில் சராசரி வேகத்தை பின்பற்றாமல் அதிவேகத்தில் செல்வதால்தான் பெரும்பாலான சாலைவிபத்துகள் நேரிடுகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
புறத்தடைகள் எறும்புகளின் போக்குவரத்தை சீர்குலைக்க முடியுமா? இதையும் விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். சீராகச் செல்லும் ஒரு எறும்பு வரிசையின்-கூட்டில் இருந்து உணவு தேடிச்செல்லும் எறும்புகள், உணவு கொண்டு போகும் எறும்புகள் அடங்கிய வரிசை- இடையில் தடையை வைத்து, மெல்லிய திறப்பு மட்டும் விடப்பட்டது. அப்போது அவை செயல்பட்ட விதம் பிரமிப்பாக இருந்ததாம். ஒரு வரிசைதான் செல்ல முடியும் என்ற நிலையில், ஒரு வரிசை எறும்புகள் அப்படியே திறப்பை விட்டு சற்றுத்தள்ளி நின்று கொண்டனவாம். அதனால் அந்த வரிசை அப்படியே அசையாமல் சிறிது தூரத்திற்கு நீண்டு விட்டதாம். அதே நேரத்தில் எதிர் வரிசை எறும்புகள் போய்க்கொண்டே இருந்தன. பின்னர் சிறிது நேரம் கழித்து, எதிர் வரிசை எறும்புகள் நின்று விட விட்டுக்கொடுத்த எறும்புகள் சென்றனவாம். ஒருவேளை எதிர்வரிசை எறும்புகள் உணவுடன் வந்தால் உணவற்ற எறும்புகள் முழுமையாக அவை செல்லும் வரை பொறுத்திருந்துதான் சென்றன என்று கூறி ஆச்சரியப்படுத்துகிறார்கள் ஆய்வாளர்கள். மேலும் எண்ணிக்கையில் மிக அதிகமாகி விட்டால் அவை மூன்று வரிசையாக பிரிந்து விடும் என்று கூறும் அவர்கள், உணவைப் பாதுகாக்கும் நோக்கில் உணவு கொண்டு வரும் எறும்புகள் நடு வரிசையில்தான் விடப்படும் என்று கூறுகிறார்கள்.
எறும்புகளின் இப்பண்பு சமூக விலங்கியல் (socio biology) என்று அழைக்கப்படுகிறது. சமூகத்தின் நலனுடன் ஒப்பிடுகையில் தனிநபர் நலன் முக்கியமல்ல என்ற நோக்கில் செயல்படுவதே இப்பண்பிற்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Wednesday, September 16, 2009

ஓசோன் ஓட்டை: பாதிப்புகள் கடுமையாக அதிகரிக்கும்!

புவியின் வெப்பநிலை அதிகரிப்பால் வளிமண்டலத்தின் மேற்பகுதியில் உள்ள ஓசோன் படலம் பாதிக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. வளிமண்டலத்தில் 10 கி.மீ முதல் 50 கி.மீ வரை பரவியுள்ள ஸ்ட்ரேட்டோஸ்பியர் என்ற பகுதியில் உள்ள இந்த ஓசோன் படலம்தான் ஒரு திரை போல் செயல்பட்டு புவியை சூரியனின் புற ஊதாக்கதிர்களில் இருந்து காக்கிறது. அப்படலத்தால் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான புற ஊதாக்கதிர்கள் உள்வாங்கப்பட்டு தடுக்கப்படுகின்றன. அவ்வாறு இல்லாமல் அவை நேரடியாக பூமியை வந்தடைந்தால் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு பல்வேறு புற்றுநோய்களை ஏற்படுத்தும். மேலும் மரபியல் ரீதியான பல்வேறு பாதிப்புகளையும் ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வெப்பநிலையில் ஏற்பட்டு வரும் உயர்வால் ஓசோன் படலம் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகிறது. அதாவது, வெப்பநிலை உயரும்போது ஸ்ட்ரேட்டோஸ்பியரில் உள்ள ஓசோன் மூலக்கூறுகள் அதிகமான இடப்பெயர்வுக்கு ஆளாகின்றன. கீழும் மேலுமாக அவை அலைக்கழிக்கப்படுகின்றன. இதனால் குறைந்த அளவிலான மூலக்கூறுகளே ஸ்ட்ரேட்டோஸ்பியரில் இடம்பெற்றிருக்கும் என்பதால், ஓசோன் படலத்தின் அடர்த்தி குறைகிறது. இதைத்தான் எளிமையாக `ஓசோனில் ஓட்டை' என்று சொல்கிறோம். இந்த ஓட்டை வழியாக புவியின் தென் அரைக்கோளம் ஏற்கனவே அதிகளவிலான புற ஊதாக்கதிர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் வெப்பநிலை மேலும் உயரும்பட்சத்தில் இன்னும் அதிக பாதிப்புகள் ஏற்படும் என்று கனடா நாட்டு விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
அந்நாட்டின் டொராண்டோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தியோடர் ஷெப்பர்டு மற்றும் மைக்கேலா ஹெக்லின் ஆகியோர் அண்மையில் ஓசோன் படலத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தனர்.புவியின் வெப்பநிலை உயர்வால் அடுத்த 100 ஆண்டுகளில் ஏற்படப்போகும் பாதிப்புகள் என்ன என்பது குறித்து கணினி மாதிரிகள் வடிவமைக்கப்பட்டன. அதன் அடிப்படையில் நடந்த ஆய்வின் முடிவில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்தால் தென் அரைக்கோளம் இன்னும் 20 சதவிகிதம் அதிகமாக புற ஊதாக்கதிர்களின் பாதிப்புக்கு உள்ளாகும் என்று அவர்கள் கூறியுள்ளனர். இதனால் புற்றுநோய்கள் மற்றும் மரபியல் ரீதியான பாதிப்புகளுடன் காற்றின் தரமும் வெகுவாகக் குறையும் அபாயம் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தென்பாதி பாதிக்கப்படும் அதேவேளையில் உலகின் வடபாதி ஏற்கனவே பெற்று வரும் புற ஊதாக்கதிர்களின் அளவில் 9 சதவிகிதம் குறைவாகப் பெறும் என்ற ஆச்சரியமான தகவலையும் அவ்விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஓசோனுக்கு மிக அதிக பாதிப்பு ஏற்படுத்தும் என்று கருதப்படும் குளோரோ ப்ளூரோ கார்பன் போன்ற சில வேதிப்பொருட்களுக்கு 1987 ம் ஆண்டிலேயே உலகளாவிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அது இன்னும் வளிமண்டலத்தில் இருந்து கொண்டு பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டுதான் உள்ளது. மேலும் நைட்ரஸ் ஆக்ஸைடு உள்ளிட்ட மற்றும் சில வேதிப்பொருட்கள் இந்தப் பட்டியலில் புதிதாகச் சேர்ந்துள்ளன. சிரிப்பூட்டும் வாயு என்று அழைக்கப்படும் நைட்ரஸ் ஆக்ஸைடு, செயற்கை உரங்கள் பயன்பாட்டால் அதிகம் வெளியாகிறது. ஆண்டுக்கு 10 லட்சம் டன் என்ற அளவில் வெளியாகும் இந்த வாயு தற்போது ஓசோன் படலத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
மேலும் ஓசோன் படலம் பாதிக்கப்படுவதற்கான மிக முக்கிய காரணம் வளிமண்டலத்தில் அதிகளவில் பசுங்கூட வாயுக்கள் வெளிவிடப்படுவதாகும். படிம எரிபொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதன் மூலம் இது நிகழ்கிறது. பணக்கார நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்தான் பசுங்கூட வாயுக்களை அதிக அளவில் வெளியிட்டு வருகின்றன. ஆனால் அவை வளரும் நாடுகள் மீது இப்பழியைப் போடுகின்றன. வளரும் நாடுகள் படிம எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்க வேண்டும் என்று ஓயாது கத்திக்கொண்டிருக்கின்றன. மேலும் படிம எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதாகக் கூறிக்கொண்டு அவை உணவுப்பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை விளைவிக்கும் உயிரி எரிபொருள் பயன்பாட்டுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றன.
இந்நிலையில்தான் புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவது குறித்து வரும் டிசம்பர் மாதம் டென்மார்க் நாட்டின் கோபன்ஹெகன் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் மாநாடு நடக்கிறது. இதில் கொள்கை அடிப்படையிலான பல்வேறு முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பிளாஸ்டிக் விற்கும் செஸ் வீராங்கனை!

ஜே.சரண்யா... 14 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று அசத்திய இச்சிறுமி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். சென்னை திருவொற்றியூரில் தனது தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வருகிறார்.
பொதுவாக செஸ் விளையாட்டு பணக்காரர்களுக்கான விளையாட்டு என்று கருதப்படுகிறது. ஆனால் சரண்யா விஷயத்தில் இது தலைகீழாக உள்ளது. அவரது தாய் தங்கம் திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோயில் வாயிலில் பிளாஸ்டிக் மற்றும் மண்ணால் ஆன சிறு பொருட்களை விற்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அவரது தந்தை குடும்பத்தை கைவிட்டுச் சென்று விட்டாராம். அவர் எங்கிருக்கிறார் என்றே எந்தத் தகவலும் இல்லாத நிலையில், தாய் தங்கத்தின் வருமானத்தைக் கொண்டு மட்டுமே குடும்பம் நடந்து வருகிறது. அருகில் உள்ள வேலம்மாள் மெட்ரிக் பள்ளியில் படித்து வரும் சரண்யாவும் அவரது சகோதரியும் விடுமுறை நாட்களில் தாய்க்கு உறுதுணையாக வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அவரது தாய் தங்கம் கூறுவதாவது: "வெள்ளிக்கிழமை மட்டும்தான் கோவிலுக்கு கூட்டம் வரும். அப்போதுதான் நிறைய விற்பனை நடக்கும். மற்ற நாட்களில் மந்தமாகத்தான் இருக்கும். அதுவும் மழைக்காலம் என்றால் வியாபாரம் நடப்பதே அரிது", என்கிறார்.
சரண்யா படித்து வரும் வேலம்மாள் மெட்ரிக் பள்ளி அவரது செஸ் ஆர்வம் காரணமாகவும், குடும்பத்தின் வறுமை நிலை காரணமாகவும் அவருக்கு இலவசக் கல்வியை அளித்து வருவதாக தங்கம் கூறுகிறார். அவரது சகோதரிக்கும் இலவசக் கல்வியை அப்பள்ளி அளித்து வருகிறது. மேலும் வெளிநாட்டுப் பயணங்களுக்கு ஆகும் செலவையும் பெரும்பாலும் பள்ளியே ஏற்றுக் கொள்கிறது என்கிறார் தங்கம். சரண்யாவின் ஆசிரியர்களும் அவருக்கு மிக்க உறுதுணையாக இருக்கின்றனர். போட்டிகள் காரணமாக சரண்யா தவற விடும் வகுப்புகளுக்காக சிறப்பு வகுப்புகளை அவர்கள் எடுக்கின்றனர் என்று நன்றியுடன் கூறுகிறார் அவர்.
"நான் விரைவில் சர்வதேச மாஸ்டர் ஆகிவிடுவேன்", என்று நம்பிக்கையுடன் சரண்யா கூறும் போதும், அவர் மிகப்பெரிய அளவில் சாதிக்க பள்ளியின் உதவி மட்டும் போதாது. அவரை ஸ்பான்சர் செய்ய நல்ல நிறுவனம் வேண்டும் என்று அவரது பயிற்சியாளரான வேலாயுதம் கூறுகிறார். ஏனெனில் சரண்யா சர்வதேச மாஸ்டராக இன்னும் நிறையப் போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது என்கிறார் அவர்.
குடும்பத்தின் வறுமை காரணமாக மிகச்சிறந்த செஸ் வீராங்கனையே தெருவோர வியாபாரியாக மாறும் இந்நாட்டில்தான் கோடிக்கணக்கான டாலர்களில் புரளும் கிரிக்கெட் வீரர்களும் உள்ளனர். அண்மையில் பணக்காரர்களை பட்டியல் போடும் போர்ப்ஸ் இதழில் அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் இடம்பெற்றுள்ளது. இதில் இந்திய கேப்டன் தோனி 1 கோடி டாலருக்கும் அதிகமான ஆண்டு வருமானத்துடன் முதலிடத்தில் உள்ளார். அவரை 17 நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு ஸ்பான்சர் செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலின் முதல் 10 இடங்களுக்குள்ளாக 5 இந்தியர்கள் உள்ளனர். சச்சின்(80 லட்சம் டாலர்கள்-2ம் இடம்), யுவராஜ்(55 லட்சம்-3), டிராவிட்(50லட்சம்-4). சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியும் முதல் பத்து இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 35 லட்சம் டாலர் சம்பாத்தியத்துடன் ஆஸ்திரேலிய கேப்டன் பான்டிங்குடன் இணைந்து 6ம் இடத்தில் உள்ளார்.
கிரிக்கெட் வீரர்கள் இவ்வாறு கோடிகளில் புரண்டு கொண்டிருக்கும் வேளையில், திறமை வாய்ந்த இளம் செஸ் வீராங்கனை ஸ்பான்சர் செய்வதற்கு யாரும் இல்லாமல் தவிப்பது விசித்திர முரணாகும்.

Saturday, August 29, 2009

இது கதையல்ல, நிஜம்....!



"ஒரு ஊருல ஒரு காக்கா இருந்துச்சு. ஒரு நாள் ரொம்ப தூரம் பறந்து போயிட்டு வந்ததால அதுக்கு ரொம்ப களைப்பா இருந்துச்சு. தண்ணித் தாகமும் எடுத்துச்சு. சுத்திச் சுத்தி பாத்தா தண்ணியே இல்ல. சரினு சொல்லி கொஞ்ச தூரம் பறந்து போய் தேடிப் பாத்துச்சு. அப்ப ஒரு வீட்டு முன்னால ஒரு பானை இருந்ததைப் பாத்துச்சு. உடனே ரொம்ப சந்தோஷமா எறங்கிப் போயி பானையில உக்காந்து எட்டிப் பாத்துச்சு. ஆனா அதுல தண்ணி கொஞ்சமாத்தான் இருந்துச்சு. சரி முயற்சி பண்ணி பார்ப்போமேனு நெனச்சு மூக்க உள்ள விட்டுப் பாத்தா, தண்ணி எட்டுல. அதுக்கு அழுகை அழுகையா வந்துச்சு. தண்ணித் தாகம் வேற ரொம்ப அதிகமாயிடுச்சு. ரொம்ப தூரம் தேடிப்பாத்தும் தண்ணி கெடச்ச இடம் இதுதான். இதை விட்டுட்டு போக அதுக்கு மனசு வரல. சரி ஏதாவது பண்ணிப் பாக்கலாமேனு நெனச்சு உக்காந்து யோசிச்சுது. அது உண்மையாவே ரொம்ப புத்திசாலி காக்கா. திடீர்னு ஒரு யோசன வந்து பக்கத்துல கெடந்த கூழாங்கல்லையெல்லாம் எடுத்து பானைக்குள்ள போட்டுச்சு. ஒவ்வொரு கல்லா போடப்போட தண்ணி மேல வந்துச்சு. தண்ணி மூக்குக்கு பக்கத்துல வந்ததும் சந்தோஷமா குடிச்சுட்டு பறந்து போயுடுச்சு...."
நாம் சிறுவயதில் கேட்ட கதைதான் இது. தேவையே கண்டுபிடிப்பின் தாய் என்ற நீதியைக் கூறுவதாக உள்ள இப்புகழ்பெற்ற கதையை எழுதியவர் ஈசாப் என்ற கிரீ° நாட்டு அடிமை ஆவார். விலங்குகளையே கதாபாத்திரங்களாகக் கொண்டு இதுபோல் நூற்றுக்கணக்கான கதைகளை அவர் எழுதியுள்ளார். அவர் எழுதிய இந்த அறிவுள்ள காகத்தின் கதை வெறும் கதையல்ல என்று அறிவியலறிஞர்கள் சொல்கின்றனர். ஈசாப்பின் காகம் மட்டுமல்லாமல் உலகில் உள்ள பெரும்பாலான காகங்களும் அறிவுடையவை என்று அவர்கள் கூறுகின்றனர். கல் மட்டுமல்லாது சிறு குச்சிகள் உள்ளிட்ட மற்ற பொருட்களையும் பயன்படுத்துவது குறித்து அவை தெரிந்து வைத்துள்ளன என்று கூறி ஆச்சரியப்படுத்துகிறார்கள் அவர்கள்.
ரூக் எனும் ஒருவகைக் காகங்கள் இது போன்ற சூழ்நிலையை உருவாக்கும்போது -அதாவது ஒரு கருவியைப் பயன்படுத்தினால்தான் அதன் உணவைப் பெற முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்கும்போது- கருவிகளை அனாயசமாகப் பயன்படுத்துகின்றனவாம்.
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் இணைந்த ஆய்வுக்குழுவினர் 4 ரூக் வகைக் காகங்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். ஈசாப் கதையில் வருவது போலவே ஒரு நீண்ட வாயுடைய கலத்தில் சிறிதளவு தண்ணீரை வைத்தனர். ஆனால் காகங்களுக்கு தாகம் ஏற்படும் வரை அவர்கள் காத்திருக்கவில்லை. மாறாக ஒரு சிறிய புழுவை உள்ளே விட்டனர். பக்கத்தில் ஒரு கற்குவியலை ஏற்படுத்தினர். புழுவைப் பார்த்த காகங்கள் அதை எப்படி எடுப்பது என்று நீண்ட நேரம் யோசிக்கவில்லை. கலத்தினுள் முதலில் எட்டிப்பார்த்தன. நீர்மட்டம் எவ்வளவு உள்ளது என்று பார்த்த பின்னர் சரியான அளவில் கற்களை உள்ளே போட்டு நீர்மட்டத்தை உயர்த்தி புழுவை எடுத்துச் சுவைத்தன. இரண்டு காகங்கள் முதல் சோதனையின் போதே தம் முயற்சியில் வெற்றிபெற்றன. மற்ற இரண்டும் அடுத்த முயற்சியில் வெற்றி பெற்றன. இந்த ஆய்வைச் செய்த விஞ்ஞானிகள்,எத்தகைய கற்களைப் பயன்படுத்துவது என்று கூட அவை எளிதில் கற்றுக்கொண்டன என்று கூறுகிறார்கள். சிறிதும் பெரிதுமான கற்கள் இருந்த குவியலில் அவை பெரும்பாலும் பெரிய கற்களையே தேர்ந்தெடுத்தனவாம். பெரிய கற்களைப் பயன்படுத்தினர்ல் தண்ணீர் சீக்கிரமே மேலே வந்து விடும் என்பதால்தான் அவை அவ்வாறு செய்கின்றன என்று ஆச்சரியப்படுத்துகிறார்கள் அவர்கள். மற்றொரு தனிச் சோதனையையும் செய்து இதை அவர்கள் உறுதி செய்திருக்கிறார்கள்.
இதேபோல் நியூ காலிடோனியன் வகை காகங்கள் குறித்து நடத்தப்பட்ட சோதனையில் இதைவிட ருசிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. அவ்வகைக் காகங்கள் தமது உணவை அடைய தொடர்ச்சியாக 3 கருவிகளைக்கூட பயன்படுத்தும் திறன் கொண்டிருக்கின்றன என்று அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆக்°போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய இந்த ஆய்வில் ஒரு கலத்தில் சிறு புழு ஒன்று விடப்பட்டது. அருகே வேறு பல கலங்கள் இருந்தன. அவற்றில் சிறிதும் பெரிதுமான பல கொக்கிகள் வைக்கப்பட்டிருநதன. ஆனால் அவையும் புழுவைப்போலவே பறவைகளுக்கு எட்டாத ஆழத்தில் இருந்தன. அதே சமயத்தில் ஒரு சிறிய கொக்கி அருகே வைக்கப்பட்டிருந்தது. காகங்கள் என்ன செய்தன என்று யூகிக்க முடிகிறதா உங்களால்? முதலில் சிறிய கொக்கியை அவை அலகால் எடுத்தன. அதைக்கொண்டு நடுத்தரமான கொக்கியை எடுத்தன.(நடுத்தரமான கொக்கிகளை மட்டுமே சிறிய கொக்கிக்கு எட்டும் வகையில் வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது) பின்னர் அந்த நடுத்தர நீளத்தில் உள்ள கொக்கியைக்கொண்டு நீண்ட கொக்கியை எடுத்தன. இதையடுத்து அந்த நீளமான கொக்கியின் உதவியால் அவை புழுவை எடுத்து உண்டன. ஒரு கதையைப் போன்று இருக்கிறது அல்லவா? சோதனை செய்யப்பட்ட 7 காகங்களில். 4 காகங்கள் இவ்வாறு 3 கருவிகளை தொடர்ச்சியாகப் பயன்படுத்தி புழுவை உண்டனவாம்.
இது உண்மையில் ஆச்சரியமானதுதான். இதுவரை கருவிகளைப் பயன்படுத்தும் ஆற்றல் மனிதனைத் தவிர உராங் உட்டான் குரங்குகளுக்கு மட்டுமே இருப்பதாகக் கருதப்பட்டது. தற்போது இதுபோன்ற சிலவகை காகங்களுக்கும் இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மேலும் பல ஆய்வுகளும் நடந்து வருகின்றன. எதிர்காலத்தில் மேலும் பல உண்மைகளும் வெளிவரக்கூடும்.

Monday, July 27, 2009

ஆழிப்பேரலையிலிருந்து விடுதலை?



டிசம்பர் 26, 2004.... இத் தேதியை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. ஆம்... அன்றுதான் சுனாமி என்று அழைக்கப்படும் ஆழிப்பேரலையின் சீற்றத்தில் சிக்கி லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இன்னுயிரை இழந்தனர். இந்தோனேஷியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தால் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட அலையே சுனாமியாக மாறி இப்பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.
இயற்கையை மனிதன் முற்றிலுமாக வென்று விடவில்லை என்பதை எடுத்துக்காட்டுவது போன்று சுனாமியின் கோரத்தாண்டவம் இருந்தது. இத்தகைய பேரிடர் ஏற்படப் போவதை விஞ்ஞானிகளால் முன்கூட்டியே சொல்ல முடியவில்லை. சுனாமியால் நிகழ்ந்த இப்பெரும் சோகத்தை விதியின் திருவிளையாடல் என்றும், கடவுளின் கோபம் என்றும் பலர் பலவாறாக கூறிக்கொண்டிருந்தனர். ஆனால் அறிவியல் எப்போதும் போல் சத்தமில்லாமல் தனது கடமையைச் செய்து கொண்டிருந்தது. அறிவியலறிஞர்களின் இடைவிடாத இந்த ஆராய்ச்சியின் பலனாய் தற்போது சுனாமியை முன்கூட்டியே கண்டறிவதில் குறிப்பிடும்படியான தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் செயற்கைக்கோள்களில் பொருத்தப்பட்ட ரேடார் கருவிகளைக் கொண்டே ஏற்படப் போகும் சுனாமியைக் கண்டறியலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
விஞ்ஞானி காடின் என்பவர் தலைமையிலான அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகளால் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் சுனாமி அலை ஏற்படும்போது கடல் நீரின் மேற்பரப்பின் தன்மை மாறி விடும் என்பது கண்டறியப்பட்டது. இதுநாள் வரை சுனாமி அலைகள் ஏற்படுவதை நீரின் தன்மையை வைத்துக் கண்டறிய முடியாது என்று நம்பப்பட்டு வந்தது. ஆனால் அந்த நம்பிக்கையை இந்த ஆய்வு தகர்த்துள்ளது. கடந்த 1994 ம் ஆண்டு ஹவாய் தீவுகளை ஆழிப்பேரலை தாக்கிய போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள், பேரலை ஏற்பட்டபோது கடலில் மிகப்பெரிய நிழல் ஏற்பட்டதைக் காட்டின. இதேபோல் 1996 ம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய சுனாமியின்போது பதிவு செய்யப்பட்ட ஆவணங்களும் ஒருவகையான நிழல் ஏற்பட்டதைக் குறிப்பிட்டிருந்தன. இந்த அம்சத்தை காடின் தலைமையிலான ஆய்வாளர்கள் கூர்ந்து கவனித்தனர். 2004 ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் இதனை அவர்கள் நேரில் உறுதி செய்தனர். இந்த அம்சம் போன்றே கடல் நீரின் தன்மையிலும் அடிப்படையான சில மாறுபாடுகள் ஏற்பட்டதை அவர்கள் கண்டனர்.

"சுனாமியின் முன்னோடி அலை கரையை நோக்கி முன்னேறும்போது கடல் நீரை பெருமளவில் கலக்குகிறது(stir). அப்போது கடல் நீரின் வண்ணம் அடர்த்தியாவதுடன் கடினத்தன்மையும் ஏற்படுகிறது. இந்தக் கடின நீரே அலைக்கு இணையான நிழலை கடலில் ஏற்படுத்துகிறது" என்று தங்கள் ஆய்வுரையில் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிழலின் அளவு ஏற்படும் சுனாமியின் வேகத்தையும் வலிமையையும் பொறுத்தது. இந்த நிழலை விண்வெளியில் சுற்றி வரும் ரேடார் கருவிகளைக் கொண்டு காண முடியும் என்பதால் எதிர்காலத்தில் உயிர்களைக் காக்க இம்முறை பயன்படக்கூடும் என்று அவர்கள் கூறுகின்றனர். "மைக்ரோவேவ் ரேடார்கள் என்று அழைக்கப்படும் நுண்ணலை ரேடார் கருவிகள் புவியைச் சுற்றி வருகின்றன. இவற்றால் பல கிலோமீட்டர் தூரம் பரந்த கடலின் மேற்பரப்பைத் துல்லியமாக கண்டுணர முடியும். கடலின் மேற்பரப்பைக் கண்டறிவதற்கென்றே பிரத்யேக மென்பொருட்களை இவற்றில் உருவாக்குவதன் மூலம் எதிர்காலத்தில் சுனாமியை முன்கூட்டியே எளிதில் கண்டறிய முடியும்,"என்று காடின் கூறுகிறார்.
தற்போதைய நிலையில் சுனாமியை முன்கூட்டியே கண்டறிய இரண்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதில் ஒன்று கடல் நீரின் அழுத்தத்தில் ஏற்படும் மாறுபாடுகளைக்கொண்டு சுனாமியைக் கண்டறிவதாகும். பசிபிக் பெருங்கடல் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இந்த முறையிலேயே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. "டார்ட்"(Deep ocean Assesment and Reporting of Tsunamis)) என்று அழைக்கப்படும் இம்முறையில் பயன்படுத்தப்படும் கருவிகள் கடலில் குறிப்பிட்ட இடங்களில் அமைந்திருக்கும். பசிபிக் பெருங்கடல் முழுவதும் மொத்தம் 39 இடங்களில் இதற்கான மையங்கள் உள்ளன. கடல் நீரில் ஏற்படும் அழுத்த மாறுபாடுகளைக் கணக்கிடும் இக்கருவிகள் சுனாமி ஏற்படும் சிறிது நேரத்திற்கு முன் எச்சரிக்கை விடுக்கும். இந்த முறை துல்லியமான ஒன்று.
மற்றொரு முறை கடல் நீரின் உயரத்தை அளக்கும் கருவிகளைக் கொண்டு(altimeter)
சுனாமியைக் கண்டறிவதாகும். விண்வெளியில் உள்ள சில செயற்கைக்கோள்களில் இதற்கான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த முறை அவ்வளவு துல்லியமானதல்ல என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

Friday, July 24, 2009

இதைக்கூட விட்டு வைக்க மனமில்லை மன்மோகனுக்கு...

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவரும் காலங்களை கவனித்திருப்பீர்கள். முடிவு வெளிவந்து மதிப்பெண் சான்றிதழ்கள் கொடுத்தபின்பு மாணவர்கள் வீட்டுக்குப் போகிறார்களோ இல்லையோ, நேராக வேலைவாய்ப்பு அலுவலகங்களைத் தேடி ஓடுவது தமிழகத்தில் வழக்கமான காட்சியாக உள்ளது. வேலை கிடைக்கிறதா என்பது வேறு விஷயம். பதிவு செய்து கொண்டால் நல்லதுதானே; எப்போதாவது ஒருநாள் உதவும் என்ற எண்ணத்தில் இந்தப்பதிவுகள் செய்யப்படுகின்றன. இதில் குறை கூற எதுவும் இல்லை. நிரந்தர வேலை கிடைக்காதா என்ற ஏக்கமும், பரிதவிப்புமே இதற்குக் காரணம். நிலைமை இவ்வாறு இருக்க, மன்மோகன் அரசு திடீரென வேலைவாய்ப்பகங்களை `நவீன' மயப்படுத்துவது குறித்து யோசிக்க ஆரம்பித்திருக்கிறது. இரு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மத்திய தொழில் மற்றும் வேலைவாய்ப்புத்துறைக்கான இணையமைச்சர் ஹரீஸ் ராவத், இனிமேல் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மாணவர்களுக்கான கலந்தாய்வுக் கூடங்களாகச் செயல்படும் என்று கூறியிருக்கிறார்.
"பல்வேறு துறைகளிலும் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையிலான கலந்தாய்வு மையங்களாக இனிமேல் வேலைவாய்ப்பகங்கள் செயல்படும். இனிமேல் வேலைவாய்ப்பகங்களில் அதிகளவில் கலந்தாய்வுகள்தான் நடைபெறும்", இவ்வாறு கூறியுள்ள அவர், தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களில் பகாசுர நிறுவனமான நௌக்ரி. காம் (சூயரமசi.உடிஅ) உள்ளிட்டவற்றோடு இணைந்து செயல்படும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை என்றிருக்கிறார். அதாவது இந்த `நவீன மயமாக்கும்' பணி அரசு, தனியார் கூட்டுடன் (ஞரடெiஉ-ஞசiஎயவந- ஞயசவநேசளாiயீ) செயல்படுத்தப்படுமாம்.
இது வேலைவாய்ப்பகங்களைத் தனியார் மயப்படுத்துவதற்கான திட்டமேயன்றி வேறல்ல. ஏற்கனவே வேலைவாய்ப்பகங்கள் நலிவடைந்த நிலையில்தான் உள்ளன. தமிழகத்தை எடுத்துக்கொண்டால் கடந்த 1985 ம் ஆண்டு வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்தோர் எண்ணிக்கை 10 லட்சமாக இருந்தது. அப்போது பணியாற்றிய ஊழியர்களின் எண்ணிக்கை 1150 ஆகும். ஆனால் தற்போது வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 65 லட்சம். இது 1985 உடன் ஒப்பிடுகையில் 6.5 மடங்கு அதிகம். ஆனால் தற்போது வேலைவாய்ப்பகங்களில் பணியாற்றுவோர் எண்ணிக்கை வெறும் 528 தான். போதுமான ஊழியர்களை நியமனம் செய்யாமல் நவீனமயப்படுத்துவது குறித்து யோசிப்பது விந்தையாகத்தான் உள்ளது.
இரண்டாவதாக `பலதுறைகளிலும் உள்ள வாய்ப்புகளை' மாணவர்களுக்கு எடுத்துக் கூறும் கலந்தாய்வுக் கூடமாக வேலை வாய்ப்பகங்கள் செயல்படும் என்று அமைச்சர் கூறியிருப்பது, 'வழிகாட்டுதலுடன்' அவற்றின் கடமை முடிந்து விடுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஒரு வேலைவாய்ப்பகம் என்பது வேலையைக் காட்டுவதுடன், அதனைப் பெற்றுத்தருவதாகவும் இருக்க வேண்டும். வேலையை அடையாளம் காட்டுவதுடன் தனது பொறுப்பு கழிந்தது என்று கூறுவதாக இருக்கக் கூடாது.
இதுவரை 4 1/2 கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்துவிட்டுக் காத்திருப்பதாக அமைச்சரே தனது பேட்டியில் கூறியிருக்கிறார். அவர்களுக்கு ஆக்கப்பூர்வமான வகையில் நிரந்தரப்பணியை ஏற்படுத்தித் தருவது குறித்துதான் கவலைப்பட வேண்டுமே தவிர வேறு எதையும் அரசு யோசிக்கக் கூடாது. இதுவரை வேலைவாய்ப்பகங்களில் இலவசமான சேவைதான் வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு, பதிவுமூப்பு குறித்த செய்திகளை மாவட்ட ஆட்சியர்கள் வழங்கும் போது `வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இலவச சேவைதான் வழங்கப்படுகிறது. இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்' என்று கேட்டுக் கொள்வதைக்கூட இதுவரை நாம் கண்டிருக்கிறோம். இந்நிலையில் இதிலும் தனியார் கூட்டை அனுமதித்தால் அது பெரும் கொள்ளைக்கே வழி வகுக்கும். ஒவ்வோராண்டும் பெயர்களைப் பதிவு செய்வதற்காகக் குவியும் இளைஞர்களின் எண்ணிக்கையைப் பார்த்து, அதில் கிடைக்கும் லாபத்தை கணக்குப்போட்டே தனியார் இதில் ஈடுபட முன் வந்திருக்க வேண்டும். அதற்கு அரசும் துணை போவதுதான் வேதனையானதாகும்.

நிதி இல்லையா?
அண்மையில் மாநிலங்களவையில் பேசிய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாததால் நாட்டில் இன்னும் 275 மாவட்டங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை அரசால் துவங்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார். `போதுமான நிதி இல்லை' என்ற வழக்கமான பல்லவியைப் பாடியே இவர்கள் அரசு-தனியார் கூட்டுறவையும், அதன் மூலம் மறைமுகமாக தனியார் மயத்தையும் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அரசின் நிதி வரவைப் பெருக்க ஏராளமான வழி வகைகள் உள்ளன. ஆனால் அதை வேண்டுமென்றே வீணடித்துக் கொண்டு, திரும்பத்திரும்ப தனியார் மயம் வேண்டுமென்று அரசு அடம்பிடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு உதாரணமாக மத்திய பட்ஜெட்டையே எடுத்துக்கொள்ளலாம். அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் (2009-10), வருமான வரி செலுத்துவோருக்கான 10 சதவீத சர்சார்ஜ் நீக்கப்பட்டுள்ளது. இது ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளோருக்கே பலனைத்தருமே தவிர சாதாரண ஏழை மக்களுக்கு இதன் மூலம் எந்த நன்மையும் இல்லை. மேலும் அரசுக்கு இதனால் 10 ஆயிரம் கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்படும். இந்த 10 ஆயிரம் கோடி ரூபாயை இழக்காமல் வசூலித்தால் எதற்காக தனியாருடன் கூட்டு சேருவதைப் பற்றி யோசிக்க வேண்டும்?

Tuesday, July 7, 2009

வரலாறு படைத்தார் ரோஜர் பெடரர்!



சாதனைகள் நிகழ்த்தப்படுவதே முறியடிக்கப்படுவதற்காகத்தான் என்று ஒரு முதுமொழி உண்டு. அந்த வகையில் பீட் சாம்ப்ராஸ் என்ற மகத்தான டென்னிஸ் வீரர் 7 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்த்திய 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் என்ற சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. ரோஜர் பெடரர் என்ற மற்றொரு மகத்தான வீரர் தற்போது 15 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று வரலாறு படைத்துள்ளார்.
123 வது விம்பிள்டன் போட்டியின் இறுதியாட்டத்தில் அமெரிக்க வீரர் ஆண்டி ராடிக்கின் கடுமையான சவாலை 5-7, 7-6 (6), 7-6 (5), 3-6, 16-14 என்ற புள்ளிக்கணக்கில் முறியடித்து இந்த வெற்றி மகுடத்தைச் சூடியுள்ளார் பெடரர்.
சாதாரண வெற்றி பெறுவதற்கே கடும் முயற்சி அவசியம். அப்படியிருக்க, சாதனை வெற்றி பெறுவதென்றால்....? இல்லை. வாத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வகையில் இந்த இறுதியாட்டம் இருந்தது. ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல என்ற வகையில் பெடரரும், ராடிக்கும் விளையாடினார்கள். போட்டியின் பல கட்டங்களில் பெடரரைக் காட்டிலும் ராடிக்கே சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி வரை அவர் தனது சர்வீசையே இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் முதன் முறையாக அவர் இழந்த சர்வீஸ் பெடரரின் வெற்றிப்புள்ளியாக மாறி விட்டது.
ஆட்டத்தின் முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் வென்ற ராடிக், இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்தினார். இருவருமே 6-6 என்று சமநிலையில் இருந்ததால் டை-பிரேக்கர் முறையில் அந்த செட் தீர்மானிக்கப்பட்டது. டைபிரேக்கரில் முதலில் ராடிக்தரான் சிறப்பாக விளையாடினார். பெடரரின் சர்வீஸ்களை எளிதில் முறியடித்த அவர் 6-2 என்று முன்னிலையில் இருந்தார். ஒரு புள்ளி எடுத்திருந்தால் அந்த செட் அவர் கைவசம் வந்திருக்கும் என்ற நிலையில் பெடரர் ஆவேச ஆட்டத்தை வெளிப்படுத்தினார். என்ன நடந்தது என்று மற்றவர்கள் (எதிராளி உட்பட) யோசிக்கும் முன்பாகவே அவர் புள்ளிகளைக் குவித்து, அந்த செட்டைக் கைப்பற்றினார். இதுதான் ஆட்டத்தின் முடிவைத் தீர்மானித்த நிகழ்வாகும். இதன் பிறகு அதே டை-பிரேக்கர் முறையில் 3 வது செட்டையும் கைப்பற்றிய பெடரர் 3-6 என்ற புள்ளிக்கணக்கில் 4 வது செட்டை இழந்தார்.
விம்பிள்டன் போட்டிகளில் இறுதி செட்டான 5 வது செட் டை-பிரேக்கர் முறையில் தீர்மானிக்கப்படுவதில்லை. எனவே, இதில் இருவரும் 6 புள்ளிகளை எடுத்த பின்பும் ஆட்டம் நீண்டு கொண்டே சென்றது. இருவரும் தங்களது சர்வீசை இழக்காமல் இருந்ததால், யார் மற்றவரது சர்வீசை முறியடிக்கிறாரோ அவர் வெற்றி பெறுவார் என்ற நிலை இருந்தது. ஆனால் அது விரைவில் நடைபெறும் சாத்தியக்கூறு இருப்பதாகவே தோன்றவில்லை. 3 1/2 மணி நேரம் விளையாடிய பின்பும் களைப்படையாமல் இருந்த இருவரும் நாட்கணக்கில் கூட விளையாட தாங்கள் தயார் என்பது போல விளையாடிக் கொண்டே இருந்தனர். டெரரைப் பொறுத்தவரை அவரது சர்வீஸ் மிகச்சிறப்பாக இருந்தது. எதிராளியால் தொட முடியாத `ஏஸ்' களை அவர் 50 முறை போட்டார். (விம்பிள்டன் சாதனையை நிகழ்த்தியவர் குரோஷிய வீரர் இவோ கார்லோவிச் - 51 ஏஸ்கள்) எனவே அவர் ராடிக்கின் ஒரு சர்வீஸை முறியடித்தாலே வெற்றி பெற்று விடுவார் என்ற நிலை இருந்தது. கடந்த 2004 மற்றும் 2005 ம் ஆண்டுகளில் பெடரரிடம் விம்பிள்டனை இழந்திருந்த ராடிக் இந்த முறை எப்படியும் வென்று விடுவது என்ற ரீதியில் விடாப்பிடியாக விளையாடினார். மிகச்சிறந்த வீரரான அவர் இதுவரை ஒரே ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைத் தான் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. (யுஎஸ் ஓபன்- ஆண்டு) மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றிந் இறுதியாட்டத்தில் நுழைந்திருந்த சுவர் ஆவேசமாகவும், துடிப்புடனும் விளையாடினார்.
ஆனால் வரலாற்றைத் தள்ளிப்போடும் அவரது முயற்சி பெடரரின் முன்பு நீண்ட நேரம் பலிக்கவில்லை. போட்டியின் 77 வது கேமில் ராடிக் செய்த தவறு பெடரரின் வெற்றிக்குக் காரணமாகியது. இப்போது இல்லாவிட்டால் எப்போதும் இல்லை என்ற ரீதியில் உறுதியுடன் விளையாடிய பெடரர் இறுதியாக வென்றுவிட்டார்.
கடந்த மே மாதம் நடந்த பிரெஞ்ச் ஓபன் போட்டியில் வெற்றி பெற்ற பெடரர் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் ஆனந்தக்கண்ணீர் வடித்தார். ஆனால் இந்த முறை ஒரு பெரிய கடமையை நிறைவேற்றி முடித்த மகிழ்ச்சியும் திருப்தியும் அவரது முகத்தில் தெரிந்தது. ஆனால் வார்த்தைகளில் அதே எளிமை இருந்தது. "இது மிகவும் சந்தோஷமான உணர்வு. ஆனால் நான் சாதனைகளை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக விளையாடவில்லை. ஆனால் அதே வேளையில் இச்சாதனையைப் படைத்திருப்பது சிறப்பானது தான்", இந்த எளிமைதான் அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றுள்ளது. போட்டியைக் காண- தனது சாதனை முறியடிக்கப்படுவதைக்காண கலி போர்னியாவிலிருந்து வந்திருந்த பீட் சாம்ப்ராஸ் பெடரரின் இந்த எளிமையான பண்பைப்பாராட்டினார். "பெடரர் ஒரு பிதாமகன் தற்போது அவர் டென்னிஸ் விளையாட்டின் உருவகமாக மாறியுள்ளார். இப்பொழுதுதான் அவருக்கு வயது 27. எனவே அவர் இன்னும் பலமுறை இங்கும் (விம்பிள்டன்) மற்ற போட்டிகளிலும் வெல்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. 18 அல்லது 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை அவர் வெல்லக்கூடும்," என்றார் சாம்ப்ராஸ்.

Thursday, June 4, 2009

அமிலமாக மாறும் கடல்நீர்!

புவி வெப்பமடைதல் காரணமாக கடல்நீர் அதிக அமிலத்தன்மை கொண்டதாக மாறி வருகிறது என்று அறிவியலறிஞர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
புவி வெப்பமடைதல் காரணமாக ஏற்படும் விளைவுகள் குறித்து நாள்தோறும் புதிய, புதிய தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியளித்த வண்ணம் உள்ளன. கடல்நீரின் அமிலத்தன்மை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள மேற்கண்ட கருத்தும் அவ்வகையைச் சேர்ந்ததுதான். ஜெர்மனி நாட்டின் பான் நகரில் பல்வேறு நாடுகளின் தேசிய அறிவியல் கழகங்களின் மாநாடு நடந்து வருகிறது. ஜுன் 1ம் தேதி துவங்கிய இம்மாநாடு வரும் 12ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இம்மாநாட்டின் முக்கிய விவாதப்பொருள் புவி வெப்பமடைதல் காரணமாக கடல்நீரில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியதாகும். உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 70 நாடுகளின் அறிவியற் கழகங்கள் இதில் பங்கேற்றுள்ளன. வரும் டிசம்பர் மாதம் கோப்பன்ஹெகன் நகரில் நடைபெறவுள்ள ஐ.நா.வின் சுற்றுச்சூழல் மாநாட்டில் புவி வெப்பமடைதலைச் சமாளிப்பது குறித்து புதிய ஒப்பந்தம் போடப்படுகிறது. அதில் கடலுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பது குறித்த தீர்மானங்களைச் சேர்க்க வேண்டும் என்று இம்மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
புவி வெப்பமடைதல் எவ்வாறு கடல் நீரை பாதிக்கிறது? அறிவியலறிஞர்கள் கூறும் விளக்கம் இதுதான்: கரியமிலவாயு (கார்பன்-டை-ஆக்ஸைடு) உள்ளிட்ட பசுங்கூட வாயுக்கள் வளிமண்டலத்தில் அதிகரிப்பதே புவி வெப்பமடைதலுக்குக் காரணமாகும். குறிப்பாக கரியமில வாயு அதிகளவில் வெளியேறுகிறது. இவ்வாறு வெளிப்படும் அவ்வாயு கடல் நீரால் உள்வாங்கப்படுகிறது. இதன் பின்னர் அவற்றிற்கிடையே நடக்கும் சில வேதிவினைகள் கடல்நீருக்கு அமிலத்தன்மையைத் தருகின்றன. இதுவரை சிறிய அளவில் ஏற்பட்டு வந்த இவ்வினை, புவி வெப்பமடைதலால் அதிகளவில் நிகழ்கிறது. இதனால் பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக இருந்ததை விட கடல்நீர் அதிக அமிலத்தன்மை கொண்டதாக மாறிவருகிறது என்கிறார்கள் அவர்கள்.
இவ்வாறு திடீரென அமில-காரச் சமநிலை(pH) பாதிக்கப்படுவதால் கடல் வாழ் உயிரினங்களுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. புதிய சூழல் அவை உயிர்வாழத்தகுதியுடையதாக இருக்குமா என்பது ஆய்வுக்குரிய ஒன்றாகும். மேலும் கடல்நீரில் அமிலத்தன்மை அதிகரிப்பதால் உடலில் ஓடுடைய கடல்வாழ் உயிரிகள் வித்தியாசமான பிரச்சனையைச் சந்திக்கின்றன. அவற்றின் ஓடுகள் அரிக்கப்படும் அபாயம் உள்ளதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். கிளாம் (clam) என்று அழைக்கப்படும் ஒருவகை ஓட்டு மீன் (shell fish) ஆர்க்டிக் கடலில் வசிக்கிறது. அக்கடலில் அமிலத்தன்மை அதிகரிப்பதால் 2060ம் ஆண்டு வாக்கில் கிளாம் மீன் பெரும் அபாயத்தைச் சந்திக்கும் என்று சில கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. இதனால் கடல் வாழ் உயிரினங்களின் உணவுச்சங்கிலியில் பெரும் மாற்றம் ஏற்படும் என்று அறிவியலறிஞர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு ஏற்பட்டால் உயிரினங்கள் பெரும் சிக்கலைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
கடல் நீரில் ஏற்படும் இந்த அதிரடி மாற்றம் மீளாத்தன்மை கொண்டது (irreversible) என்று கூறும் அறிவியலாளர்கள், இதனைச் சரி செய்ய ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தேவை என்று எச்சரிக்கிறார்கள். இதனால் கரியமிலவாயு உள்ளிட்ட பசுங்கூட வாயுக்கள் வளிமண்டலத்தில் கலப்பதை மிகுந்த அக்கறை எடுத்து கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் கடமை என்று அவர்கள் கூறுகின்றனர்.

Tuesday, June 2, 2009

விண்வெளிக்குப்பைகள்: ஒரு புதிய அச்சுறுத்தல்!

கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யாவின் சைபீரியா பகுதிக்கு மேலே விண்வெளியில் ஒரு பயங்கர விபத்து நடந்தது. மோதிக்கொண்டவை இரண்டு செயற்கைக் கோள்கள். ஒன்று அமெரிக்காவின் இரிடியம் 33 என்ற வர்த்தக செயற்கைக்கோள். மற்றொன்று செயல்பாட்டை நிறுத்திவிட்ட ரஷ்யாவின் செயற்கைக்கோள் உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விபத்து விண்வெளிக் குப்பைகளைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை விண்வெளியில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளுக்கு உணர்த்தியுள்ளது. சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை பெருகி வருவது குறித்து நாம் மிகுந்த கவலைப்படுகிறோம். ஏறக்குறைய இதே போன்று விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. முன்னர் கோள்களை ஆராயவும், விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்ளவும் மட்டும்தான் செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்டன. ஆனால் தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் வர்த்தக நோக்கில் ஏராளமான செயற்கைக்கோள்கள் அனுப்பப்படக் காரணமாகியுள்ளது. விண்வெளித்துறையே வணிகமயமாகி விட்டது என்று கூடச் சொல்லலாம். இவ்வாறு அனுப்பப்படும் செயற்கைக் கோள்கள் நீண்ட காலத்திற்கு இயங்குபவையல்ல. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே அவை செயல்படும். பின்னர் எவ்விதப் பயனுமின்றி அவை விண்வெளியில் சுற்றி வரும். கோள்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசை காரணமாக எவ்வித எரிபொருள்களின் தேவையும் இன்றி அவை விண்வெளியில் சுற்றி வருகின்றன.
செயற்கைக் கோள்கள் மட்டுமல்ல. விண்வெளி வீரர்கள் பயன்படுத்தி தூக்கி எரியும் கழிவுப்பொருட்கள், ராக்கெட்டுகளை விண்வெளியில் செலுத்திப்பின் அப்படியே விண்வெளியில் தங்கி விடும் எரிபொருட்கலன்கள், செயற்கைக் கோள்களில் இருந்து வெடித்துச் சிதறிய பகுதிகள், சிறிய திருகாணிகள் என அனைத்துமே விண்வெளிக் குப்பைகளாகும். விண்வெளியில் அவை ஏராளமாக உள்ளன. சாலையில் உள்ளது போன்று போக்குவரத்து நெரிசல் அங்கு இல்லையென்றாலும், அவற்றைக் கட்டுப்படுத்துவது குறித்து யோசிக்காவிட்டால் எதிர்காலத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக அவை மாறிவிடும் ஆபத்து உள்ளது. அதாவது கோடிக்கணக்கில் செலவு செய்து அனுப்பப்படும் செயற்கைக்கோள்கள் பாதிக்கப்பட்டு மிகப்பெரிய பொருள் இழப்பு ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள். இதற்குக் காரணம் அவை சுற்றி வரும் வேகமாகும். அவை வினாடிக்கு சராசரியாக 10 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றி வருகின்றன. அதிகபட்ச வேகம் 16 கி.மீ. ஆகும்.
சாலையில் செல்லும் வாகனங்கள் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் செல்லும் போதே நாம் மிகுந்த வேகத்தில் செல்வதாகக் கூறுகிறோம். அப்படிச் செல்லும்போது விபத்து ஏற்பட்டால் அதோ கதிதான்! ஆனால் ஒரு மணிக்கு சராசரியாக 57,600 கி.மீ. வேகத்தில் செல்லும் போது மோதிக்கொண்டால் என்ன நடக்கும்? நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது அல்லவா? ஆம். வெறும் 10 கிராம் அளவுள்ள ஒரு திருகாணி ஒரு செயற்கைக்கோள் மீது மோதினாலே அது ஏற்படுத்தும் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும். வளர்ந்த நாடுகளின் நிலை பரவாயில்லை. இந்தியா போன்ற வளரும் நாடுகள் தங்களது தேசிய மொத்த வருவாயிலிருந்து பெரும் தொகையைச் செலவு செய்து செயற்கைக் கோள்களை அனுப்பி வருகின்றன. அப்படியிருக்கும்போது இது போன்று ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் என்ன ஆகும்?
விண்வெளியில் நெரிசல் ஏற்படுவதற்கு நீண்ட காலம் ஆகாது. அண்மையில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா வெளியிட்டுள்ள ஒரு தகவல் கண்களால் காணக்கூடிய அளவில் சுமார் 17 ஆயிரம் கழிவுகள் விண்வெளியில் உள்ளதாகக் கூறுகிறது. கண்காணிப்புக் கருவிகளால் காண முடியாத கழிவுகளின் எண்ணிக்கை குறித்து யாராலும் சரியாகச் சொல்ல முடியவில்லை. விண்வெளி விஞ்ஞானிகளின் கணிப்பின்படி 150 மில்லியன் துண்டுகளுக்கும் மேல் விண்வெளியில் கழிவுகள் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இதனால் விண்வெளி ஆய்வில் ஈடுபட்டுள்ள நாடுகள் இது குறித்து கவனம் செலுத்தத் துவங்கியுள்ளன. விண்வெளிக் கழிவுகளைக் குறைப்பதற்கான சர்வதேச முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று கடந்த ஏப்ரல் மாதம் நடந்த அறிவியலாளர்கள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. செயற்கைக் கோள்கள் செயலிழப்பதற்கு முன்பே அதிக உயரத்திற்கு அனுப்புவது மற்றும் தொழில்நுட்பத்தில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்துவது என்பவை பரிசீலனையில் உள்ள யோசனைகளாகும். ஆனால் பொருட்செலவு அதிகம் ஆகும் என்பதாலும் தொழில் நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட அதிக காலம் தேவைப்படும் என்பதாலும் விரைவில் இந்த யோசனைகள் சாத்தியமாக வாய்ப்பு இல்லை என்கின்றனர் அறிவியலாளர்கள்

Friday, May 22, 2009

கொடுமையின் கூடாரமாய் குவாண்டனாமோ சிறை!

அமெரிக்க அரசின் கொடுஞ்சிறையான குவாண்டனாமோவில் நடைபெறும் சித்ரவதைகள், மனித உரிமை மீறல்கள் குறித்து அதிர்ச்சி தரும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் `தீவிரவாதத்திற்கு எதிரான போர்' என்ற பெயரில் நடத்திய பேரழிவுத் தாக்குதல்களின் போது அமெரிக்கப் படையினரால் கைது செய்யப்பட்ட போர்க்கைதிகள் பெரும்பாலானோர் இந்தச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சிறை பற்றி ஏற்கனவே வெளியாகியுள்ள தகவல்கள் உலகில் மிக மோசமான முறையில் மனித உரிமைகள் மீறப்படும் இடம் என்று தெரிவித்தன. மேலும் அமெரிக்க ராணுவதத்தினர் கைதிகளை சித்ரவதைக்கு உள்ளாக்கும் காட்சிகளைக் கொண்ட புகைப்படங்களும் வெளியாகி அதிர்ச்சியளித்தன. இந்நிலையில் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து பாரக் ஒபாமா அதிபராகப் பதவியேற்றார். புஷ் ஆட்சிக் காலத்தில் மிகக் கொடுமையான மனித உரிமை மீறல்கள் அரங்கேறிய இச்சிறையை தான் ஆட்சிக்கு வந்ததும் மூடப்போவதாக ஒபாமா வாக்குறுதி அளித்தார். ஆனால் வாக்குறுதி வாக்குறுதியாகவே நீடிக்கிறது. சிறையை மீட எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் அண்மையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் ராணுவக் கட்டுப்பாட்டிலேயே சிறை தொடர்ந்து நிர்வகிக்கப்படும் என்றும் அதை மீடும் எண்ணமில்லை என்றும் தெரிவித்தார். விதிவிலக்காக சில குறிப்பிட்ட சில கைதிகளுக்கு மட்டும் விடுதலையும், வேறு சிலருக்கு நீதிமன்ற விசாரணையும் அனுமதிக்கப்பட்டது. ஆனால் கைதிகளிடம் ராணுவத்தினர் `விசாரணை'(?) நடத்தியபோது எடுக்கப்பட்ட சுமார் 2 ஆயிரம் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என்று அவர் தடை விதித்து விட்டார். அவை ராணுவத்தினரின் மனித உரிமை மீறல்களை அம்பலமாக்கிவிடும் என்பதால் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குவாண்டனாமோ சிறையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஸ்பெயின் நாட்டின் குழு ஒன்று நடத்திய விசாரணை அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன.
சொல்லவே முடியாத வகையில் சிறைக்கைதிகள் துன்புறுத்தப்படுகின்றனர். அங்கு கடுமையான சித்ரவதைகளை நிறைவேற்றுவதற்கு என்றே ஒரு சிறப்புப்படை உள்ளதாம். ஐ ஆர் எப் (Immediate Reaction Force) என்று அழைக்கப்படும் இப்படையினர் குறித்து இதுவரை எந்தவிதத் தகவல்களும் வெளியே கசிய விடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஊடகங்களும் இது குறித்து வாயே திறக்கவில்லை.
சித்ரவதைகளையும், கொடூரதண்டனைகளையும் நிறைவேற்றுவதற்கென்றே இப்படையினர் சிறப்பாகப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனராம். விசாரணையின் போது சிறிது அலட்சியமாக கைதி பதில் சொல்லி விட்டால் போதும், அதற்காகவே காத்திருந்தது போல் ஐஆர்எப் படையினர் உள் நுழைந்து விடுவார்கள். ஒரு கைதிகள் உடலில் உள்ள பல்வேறு பாகங்களையும் இப்படையில் உள்ள ஒவ்வொருவரும் பரித்துக் கொண்டு அப்பகுதியில் மட்டும் குறிவைத்து அடிப்பார்களாம்.
மேலும் உணவு தராமல், கைதிகளைத் தூங்கவும் விடாமல் இருண்ட பாதாளச் சிறைகளில் அடைத்து துன்புறுத்துவது கைதிகளின் தலையை டாய்லெட் பேசின்களில் வைத்து அழுத்துவது, கூரிய ஆயுதங்களால் கண்களைக் குத்துவது, கைதிகளின் மீது சிறுநீர் கழித்து அவமானப்படுத்துவது என்று அவர்களின் சித்ரவதைகள் நீண்டுகொண்டே போகின்றன. கைதிகளை நாயை விடக் கேவலமாக நடத்துங்கள் என்று ஒரு உத்தரவே அங்கு உள்ளதாம்.
விசாரணையின்போது ஒத்துழைக்காத கைதிகள் என்றில்லை. வேண்டுமென்றே கைதிகளிடம் வம்பு செய்து அதற்கு அவர்கள் சிறிது கோபமானால் கூட உடனடியாக ஐஆர்எப் படையிடம் அனுப்பி விடுவார்களாம். பெரும்பாலும் இஸ்லாம் மதம் குறித்து அவதூறாகப் பேசி கைதிகளைக் கோபமடையச் செய்து பின்னர் துன்புறுத்துவதாக ஸ்பெயின் குழுவின் அறிக்கை கூறுகிறது.
எந்த வித தாமதமும் இன்றி குவாண்டனாமோ சிறையை மூடுவதே இக்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

Wednesday, May 20, 2009

தேனீக்கள் தேனை உறிஞ்சுவது எப்படி?ஆய்வில் புதிய தகவல்கள்




மலர்களில் இருந்து தேனீக்கள் எவ்வாறு தேனைச் சேகரிக்கின்றன என்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் பல ஆச்சரியமான தகவல்கள் கிடைத்துள்ளன.
மலர்களில் எவ்வாறு தேனீக்கள் அமர்கின்றன என்பது இந்த ஆய்வின் முக்கிய அம்சமாகும். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி பிவர்லி க்ளோவர் என்பவர் தலைமையிலான ஆய்வுக்குழுவினர் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டனர். இதில் மலர்களின் இதழ்களில் உள்ள செல்களின் அமைப்பு தேனீக்கள் தேனை உறிஞ்ச மிகவும் உதவுவதாகத் தெரியவந்துள்ளது. மலர்களின் இதழ்களில் கூம்பு வடிவிலான செல்கள், தட்டையான செல்கள் என இருவகை செல்கள் காணப்படுகின்றன. இவற்றில் கூம்பு வடிவ செல்கள் சிறிது சொரசொரப்பான மேற்பரப்பைக் கொண்டுள்ளன. எனவே தேனீக்கள் இச்செல்களின் மீது அமரும்போது தடுமாற்றம் இன்றி உறுதியாக அமர முடிகிறது. இதில் வியப்பான தகவல் என்னவென்றால் தேனீக்களின் கால்களின் அமைப்பு கூம்பு வடிவச் செல்களில் அமர்வதற்கேற்ப தகவமைக்கப்பட்டுள்ளதாம்! அதாவது தேனீ இச்செல்களின் மீது அமரும் போது ஏறக்குறைய ஒட்டிக் கொள்கிறது. இது பைகளை மூடுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் சொர சொரப்பான மற்றும் பஞ்சு போன்ற அமைப்பை (ஏநடஉசடி) ஒத்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஆனால் தட்டைச் செல்கள் வழுக்கும் தன்மையுடையவை. இவற்றில் அமர பெரும்பாலும் தேனீக்கள் விரும்புவதில்லை. விஞ்ஞானிகளின் இந்த ஆய்வில் ஒரு வகை ரெசினால் செய்யப்பட்ட செயற்கை மலர்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் கூம்பு வடிவ செல்களும், தட்டை செல்களும் மலர்களில் உள்ளது போலவே அமைக்கப்பட்டிருந்தன. பின்னர் தேனீக்களை அப்பகுதியில் விட்டு ஆய்வு நடத்தப்பட்டது. தேனீக்கள் என்ன செய்கின்றன என்பது அதிவேக வீடியோவில் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டது.
பூக்கள் சாய்வாக இல்லாமல் நேரான நிலையில் வைக்கப்பட்டிருந்த போது தேனீக்கள் இருவகை மலர்களிலும் சரிசமமாக அமர்ந்தன. தட்டைச் செல்களைப்பற்றியோ, கூம்பு வடிவ செல்களைப் பற்றியோ அவை கவலை கொள்ளவில்லை. ஆனால் பூக்களின் கோணம் மாற்றப்பட்டு சாய்வாக வைக்கப்பட்டபோது கூம்பு வடிவ செல்களை உடைய பூக்களில் அமர்வதையே தேனீக்கள் விரும்பின. 74 சதவீதம் அவை கூம்பு செல்களிலேயே அமர்ந்தன.
தேனீக்கள் தட்டைச் செல்களை உடைய மலர்களில் அமரும்போது மிகவும் தடுமாறினவாம். அது பனிக்கட்டிகளில் வீரர்கள் ஸ்கேட்டிங் செய்வதைப் பார்ப்பது போன்று இருப்பது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தேன் சேகரிப்பது உண்மையில் கடினமான பணி என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இயற்கை அதிக சிரமத்தை அவற்றுக்குக் கொடுப்பதில்லை. உலகில் உள்ள மலர்களில் சுமார் 80 சதவீத மலர்கள் கூம்பு வடிவ செல்களைக் கொண்டிருக்கின்றன. தேனீக்கள் மட்டுமல்ல பட்டாம்பூச்சிகள், வண்டுகள் உள்ளிட்ட மற்ற பூச்சியினங்களும் இதேபோல்தான் தேன் உறிஞ்சுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சிந்துவெளி மக்களின் மொழி!




சிந்துச்சமவெளி நாகரிகம் ஆரியர்களுடையது என்று காவிக் கூட்டம் சர்ச்சைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில், அது திராவிடர் நாகரிகமே என்பதைப் பறைசாற்றும் பல்வேறு ஆதாரங்கள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தற்போது சிந்துச் சமவெளி நாகரிக மக்கள் பயன்படுத்திய குறியீடுகள், எழுத்துருக்கள் குறித்து புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.
சிந்துச் சமவெளி நாகரிக மக்கள் பயன்படுத்தியவை வெறும் குறியீடுகள் மட்டுமே என்றும், அவற்றில் ஒரு மொழிக்குரிய கட்டமைப்பு இல்லை என்றும் சிலர் வாதாடி வந்தனர். அக்குறியீடுகளை இதுவரை யாரும் விளக்கிச் சொல்லாதது அவர்களது வாதத்திற்குச் சாதகமாக இருந்தது. ஆனால் தற்போது நடத்தப்பட்டுள்ள ஒரு ஆய்வு அவர்களது வாதங்களைத் தவிடு பொடியாக்கியுள்ளது. சிந்துச்சமவெளி மக்கள் பயன்படுத்திய குறியீடுகள் மொழிக்கான அடிப்படைக்கட்டமைப்பைக் கொண்டிருக்கின்றன என்று அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அத்துடன் அந்த மொழியும், ஆதிகாலத் தமிழ் மொழி வடிவத்தோடு பலவகைகளில் ஒத்துப்போகிறது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதனால் சிந்துச்சமவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகமே என்பது மீண்டும் ஒருமுறை அழுத்தமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் பல்கலைக்கழக கணினி அறிவியலாளர் ராஜேஷ் பி.என்.ராவ், மும்பை டாடா அடிப்படை ஆய்வு மையத்தைச் சேர்ந்த வானியல் துறை வல்லுனர்கள் நிஷாயாதவ்மற்றும் மாயங்க் என்.வாஹியா, மும்பையைச் சேர்ந்த மென்பொருள் வல்லுனர் ரிஷிகேஷ் ஜோக்லேகர், சென்னை கணித அறிவியல் நிறுவனத்தின் ரோனோஜோய் அதிகாரி மற்றும் சென்னையில் உள்ள சிந்துவெளி நாகரிக ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஜராவதம் மகாதேவன் ஆகியோர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். நவீன புள்ளியியல் முறைகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சிந்துச் சமவெளி எழுத்துருக்கள் பல்வேறு மொழி வடிவங்களோடு ஒப்பீடு செய்யப்பட்டன. சுமேரிய சித்திர எழுத்துருக்கள், ஆதிகால தமிழ் எழுத்துருக்கள், சமஸ்கிருத எழுத்துருக்கள், ஆங்கில வார்த்தைகள் மற்றும் ஆங்கில எழுத்துக்கள் ஆகியவற்றோடு சிந்து எழுத்துக்கள் ஒப்பிடப்பட்டன. எழுத்துக்களின் கோர்வையில் உள்ள ஒழுங்கற்ற தன்மை (entropy)குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வை இன்னும் துல்லியப்படுத்தும் நோக்கில் தற்போது நடைமுறையில் இருக்கும் மொழிகள் அல்லாத சில வடிவங்களோடும் (மனித டி.என்.ஏ.குறியீடுகள், பாக்டீரியாவின் புரதக்குறியீடுகள், ஃபோர்ட்ரான் என்ற கணினி மொழி ஆகியவை) சிந்து எழுத்துக்கள் ஒப்பிடப்பட்டன.
இந்த ஆய்வின் முடிவில் சிந்து எழுத்துக்கள் மொழிக்கான கட்டமைப்பைக் கொண்டுள்ளன என்பது உறுதியானது. மேலும் மற்ற மொழி வடிவங்களைக் காட்டிலும் ஆதிகால தமிழ் மொழியின் எழுத்துருக்களோடு அவை மிகவும் பொருந்திப் போகின்றன என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இது சிந்துச்சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்பதை உறுதிப்படுத்துவதாக ஆய்வு மேற்கொண்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆய்வு முடிவுகள் அண்மையில் `சயின்ஸ்' அறிவியல் இதழில் வெளியிடப்பட்டன. சிந்துவெளி நாகரிக எழுத்துக்களைப் பற்றி தற்போது பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் இது குறித்து இன்னும் பல உண்மைகள் வெளிவரக்கூடும்.
இரா.நந்தகுமார்

Saturday, March 28, 2009

ஆகாய விமானம் எவ்வாறு செயல்படுகிறது?

மனிதன் வென்றான்! மனித குலம் தோன்றிய காலம் முதல் மனிதன் கொண்டிருந்த ஆசைகளுள் ஒன்று தான் பறக்க வேண்டும் என்பது. பறவைகளைப் போலத்தானும் பறக்க முடிந்தால் பலவற்றைச் சாதிக்கலாம் என்ற கனவை அவன் கொண்டிருந்தான்.இக்கனவுகள் கதைகளில் அல்லது புராணங்களில் வெளிப்பட்டுள்ளதை நாம் காண முடியும் கிரேக்கப் புராணங்களில் கூறப்பட்ட ஐகாரஸ் மெழுகினால் செய்யப்பட்ட இறகுகளைக் கொண்டு பறந்ததாகவும், சூரியனுக்கு அருகில் சென்ற போது மெழுகு உருகியதால் அவன் கீழே விழுந்ததாகவும் ஒரு கதை உண்டு. அதே போல இந்தியப் புராணங்கள் கருடன், அனுமன் உள்ளிட்ட பறக்கும் சக்தியுடைய கதாபாத்திரங்களைக் கொண்டுள்ளன. இது ஒருபுறமிருக்க நடைமுறையில் இதைச் சாத்தியமாக்கப் பலர் முயன்றனர். தன் தோள்களோடு மரத்தாலான இறகுகளைக் கட்டிக்கொண்டு குதித்தார் ஆலிவீர் என்பவர். முயற்சி தோல்வியுற்றது; அதன் பரிசு மரணம்! ஆயினும் தொடர்ந்து பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அடுத்தகட்ட முயற்சியானது வீரத்தைத் தவிர்த்து விவேகத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. பிரெஞ்சுக்காரர்களான மான்ட்கோபயர் சகோதரர்கள் (Montgofier Brothers) பலூனைக் கண்டறிந்தனர். கூடையுடன் கூடியதாகப் பின்னால் அமைக்கப்பட்ட பலூன்களின் முன்னோடியாகும். இது இப்பலூனில் நெருப்பிலிருந்து வெளிவரும் வாயுவை அவர்கள் பயன்படுத்தினர். 1783 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரெஞ்சு அரச குடும்பத்தின் முன்னிலையில் அவர்கள் வெப்பக்காற்று பலூனைப் பறக்க விட்டனர். இதன் அடுத்தக் கட்டமாக ஹைட்ரஜன் வாயுவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஆகாயக்கப்பல்கள் 1850 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டன. ஆனால் ஹைட்ரஜன் பலூன்கள் எளிதில் தீப்பிடித்து விபத்தினை உண்டாக்கும் ஆபத்துடையனவாய் இருந்தன.
உலகை மாற்றிய அற்புத வீரர்கள்:
1903 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் நாள் ஒரு குறிப்பிடத்தக்க பெருமையைக் கொண்டு விடிந்தது. ஆம்... அன்றுதான் ஆர்வில் ரைட் மற்றும் வில்பர் ரைட் என்ற பெயர்களைக் கொண்ட ரைட் சகோதரர்கள் தங்கள் கண்டுபிடிப்பை உலகிற்குக் காண்பித்தனர். அவர் உருவாக்கிய அந்த ஆகாய விமானம் அன்று 36 மீட்டர்கள் தூரத்திற்கு 62 வினாடிகள் பறந்தது. உலகம் ஆச்சரியத்தில் மூழ்கியது. அன்றுவரை மனிதன் பறப்பதற்காகப் பயன்படுத்திய பொருட்கள் அல்லது கண்டு பிடிப்புகள், காற்றைவிட இலேசான பொருட்கள்தான் காற்றில் மிதக்க அல்லது பறக்க முடியும் என்ற தத்துவத்தை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டன. ஆனால் முதன்முதலாகக் காற்றைவிட கனமான பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது அவ்விமானம். துணி மற்றும் குச்சிகள் கொண்டு உருவாக்கப்பட்டது அது. எனவே அது ஒரு அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் கருதப்பட்டதில் வியப்பில்லை. அதிசயம் என்பதையும் தாண்டி அதனை ஒரு தொழிட்நுட்பமாகப் பார்க்கும் வேலையை அன்றைய அறிவியல் செய்ததன் பயனாய் இன்று ரைட் சகோதரர்கள் கண்டு பிடித்த விமானம் பல்வேறு மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டு குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுடன் வானில் உலா வருகிறது.
எவ்வாறு விமானம் பறக்கிறது?
"பெர்னாலியின் தத்துவம்" (Bernauli's Principle)காற்றில் அதைவிட கனமான ஒரு பொருள் எவ்வாறு மிதக்க பறக்க முடியும்? இதற்கு விடைகாண நாம் பெர்னாலியிடம் போவோம். "பாய் பொருட்களின் (வாயு மற்றும் திரவம்) ஓட்டம் அதாவது காற்றோட்டத்திலோ அல்லது நீரோட்டத்திலோ வேகம் குறைவாயிருக்கும் போது அழுத்தம் அதிகமாகவும், வேகம் அதிகமாயிருக்கும் போது அழுத்தம் குறைவாகவும் இருக்கிறது." இத்தத்துவமே ஆகாய விமானம் காற்றில் எழும்பக் காரணமாகும். ஆகாய விமானத்தின் இறகுகளுக்கு மேற்புறத்தில் மிகன் வேகமாகக் காற்றைச் செலுத்தும்போது அங்கே அழுத்தம் குறைகிறது; வெளிக்காற்றில் அழுத்தம் அதைக்காட்டிலும் அதிகம். எனவே வெளிக் காற்று விமானத்தை உயர்த்துகிறது. இதற்கு இறகுகளின் சிறப்பான வடிவமைப்பும் ஒரு காரணமாகும். இவ்வாறு பறத்தலின் முதல்கட்டம் நிறைவேறுகிறது. இது உயர்தல் (Lifting) என்று அழைக்கப்படுகிறது. இதில் பெறும் வெற்றி மட்டுமே மனிதனின் பறக்கும் கனவை நிறைவேற்றி விட முடியாது. ஊடுருவிச் செல்லல் (thrust) என்ற அடுத்த நிலையில் பறத்தலுக்கு மிகவும் அவசியமான காற்றோட்டம் செலுத்தப்படுகிறது. இக்காற்றோட்டம் இறகுகளை உயர்த்தி முன்னோக்கிப் பறத்தலுக்கு உதவி செய்கிறது. இதற்கு முன் இயக்கி (propeller) பயன்படுத்தப்படுகிறது. விமானத்தின் பாகங்களை அறிந்து கொள்வது இதனை நாம் எளிதில் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும். விமானத்தின் இறகுகள் மேற்புறம் வளைவாகவும், அடிப்புறம் தட்டையாகவும் இருக்குமாறு அமைக்கப்படுகின்றன. இறகுகளின் இச்சிறப்பான வடிவமைப்பின் காரணமாக காற்று வீசும் பொழுது இறகுகளின் மேற்புறத்தில் வேகம் அதிகமாகவும், அடிப்புறத்தில் வேகம் குறைவாகவும் இருக்கும். பெர்னாலி கோட்பாட்டின் படி, இதன்காரணமாக மேற்புறம் அழுத்தம் குறைவாகவும், கீழ்ப்புறம் அழுத்தம் அதிகமாகவும் இருக்கும். இவை இரண்டும் இணைந்து செயல்படுவதால் விமானம் மேலே தூக்கப்படுகிறது. விமானத்தின் மற்றுமொரு முக்கியமான பாகம் அதன் ப்ரொபல்லர் ஆகும். ஜெட் விமானங்களில் இப்பாகம் இருக்காது. அது மற்றொரு முறையில் செயல்படுகிறது. அதைப்பின்னால் காண்போம். propeller- ஐ ஒரு பெரிய விசிறி என்று சொல்வதில் தவறு ஏதும் இல்லை. இது வளைவாக உள்ள தகவல்களைக் கொண்டுள்ளது. அவை காற்றைக் கிழித்துச் செல்லும் வண்ணம் கூர்மையாக இருக்கம். இவற்றின் வளைந்த தன்மை கிழிக்கப்படுகின்ற காற்றைப் பின்னுக்குத் தள்ளுகிறது. தள்ளப்பட்ட இக்காற்றானது விமானத்தை முன்னுக்குத் தள்ளுகிறது. இது நியூட்டனின் மூன்றாவது இயக்க விதியை அடிப்படையாகக் கொண்ட தாகும். நாம் எல்லோரும் நன்கு அறிந்த ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு என்பதாகும் அது. முன்-இயக்கி காற்றைப் பின் தள்ளுவதை வினை என்போம். இங்கு எதிர்வினையானது காற்று. அதனைத் தள்ளுவதாகும். இதன் காரணமாக விமானம் முன் செல்கிறது.
ஜெட் விமானங்கள்:
ஜெட் விமானங்களும் நியூட்டனின் மூன்றாம் விதியைப் பயன்படுத்துகின்றன. இவற்றில் புரொப்பல்லர்கள் பயன்படுத்தப்படுவதில்லை. ஜெட் என்ஜின்கள் காற்றை, உள்ளிழுக்கின்றன. இதற்குப் பல்வேறு தகடுகளாலான ஒரு அமைப்பு உதவுகிறது. இழுக்கப்பட்ட காற்றானது ஒரு கலத்தில் சேகரிக்கப்பட்டிருக்கும் எரி பொருட்கலவை (fuel mixture) யுடன் கலந்து அதை எரியச் செய்கிறது. எரியும்போது, வெளிப்படும் காற்று மிகுந்த வேகத்துடன் வெளியிடப் படுகிறது. எந்த அளவுக்கு வேகத்துடன் காற்று வெளியிடப்படுகிறதோ, அவ்வளவு வேகத்துடன் விமானம் முன்னோக்கிச் செல்கிறது. இந்த முறையிலேயே விண்கலங்களும் (Rockets) செல்கின்றன. இத்தகு முறையில் செயல்படும் விமானங்கள் இரண்டாம் உலகப்போரின் போது முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டன. அதற்கு முன் இருந்த அனைத்து விமானங்களும் புரொப்பல்லர்-ஐப் பயன்படுத்தியே இயக்கப்பட்டன.இங்கு விமானம் பறப்பதைப் பற்றிய அடிப்படையான சில தகவல்கள் விளக்கப்பட்டுள்ளன. விமானத் தொழில் நுட்பமானது மிகவும் சிக்கலானதும் (complicated and challenging), சவால் நிறைந்ததும் ஆகும். இது மறுக்க முடியாத உண்மையாகும். ஆயினும் மனித மூளை இதனை வென்றுள்ளது. இன்னும் அத்தொழில்நுட்பம் என்பது இவ்வளவு சிக்கலாக இல்லாமல் மேலும் எளிமையானதாக ஆக்கப்படவும் கூடும்.

This is my first ever science article;published in KALAIKATHIR.

Saturday, March 14, 2009

வலைத்தளத்திற்கு வயது 20


தொலைத்தொடர்புத் துறையில் மிகபெரும் புரட்சியை ஏற்படுத்திய வேர்ல்டுவைடு வெப் (றுறுறு) என்று அழைக்கப்படும் வலைத்தளம் கண்டறியப்பட்டு மார்ச் 13ம் தேதியோடு 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன.  
1989ம் ஆண்டு மார்ச் மாதத்தில் டிம் பெர்னர்ஸ் லீ என்ற இளைஞர் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையத்தில் (செர்ன்) ஒரு ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார். " தகவல் மேலாண்மை-ஒரு திட்ட அறிக்கை" என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த அறிக்கையே வலைத்தளங்களுக்கான முன்மாதிரி வரைபடமாக மாறியது. டிம் பெர்னர்ஸ் லீ அப்போது செர்ன் மையத்தின் அணுத்துகள் ஆராய்ச்சி நிலையத்தில் மென்பொருள் வல்லுனராக இருந்தார். அங்கு நூற்றுக்கணக்கான அறிவியலறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பணிபுரிந்தனர். அவர்களின் ஆய்வு முடிவுகளை ஒருங்கிணைப்பதும், அதை ஒப்பிட்டு ஆய்வு செய்வதும் செர்ன் மையத்திற்கு மிகுந்த சவாலாக இருந்தது. மேலும் ஒவ்வொரு ஆய்வாளரும் தனித்தனியாக தங்கள் சொந்தக் கணினிகளைக் கொண்டு வந்து ஆய்வு செய்ய வேண்டியிருந்ததால் அங்கு ஒரு கடினமான சூழல் நிலவியது. டிம் லீ தான் ஆய்வாளர்களின் பணிகளை ஒருங்கிணைக்கும் பணியைச் செய்தார். முதலில் சில மென்பொருட்கள் மூலம் இதைச் செய்த அவர் கணினிகள் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடிந்தால் எப்படியிருக்கும் என்று எண்ணியதன் விளைவே வலைத்தளமாக (வெப்) உருமாறியது. வெற்றி அவருக்கு எளிதாகக் கிடைத்து விடவில்லை. செர்ன் மையத்தின் கணினி வல்லுனர் ராபர்ட் கெய்லியாவுடன் இணைந்து அவர் மேற்கொண்ட முயற்சிகள் 1990ம் ஆண்டு டிசம்பர் 25 அன்றுதான் வெற்றியைப் பெற்றுத்தந்தன. அதன் பிறகும் டிம் லீ ஆய்வாளர்கள், அறிவியலறிஞர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களிடமும் விரிவான பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 13 அன்று டிம் லீ, கெய்லியா மற்றும் அவர்களது சக தோழர்கள் செர்ன் ஆய்வு மையத்தில் கூடி வலைத்தளத்தின் பிறந்த நாளைக் கொண்டிடாடினர். •

சோசலிசப்பாதையில் பீடுநடை!



லகின் மிகப்பெரிய பன்னாட்டு காகித ஆலைகளுள் ஒன்று அது. ஸ்மர்ஃபிட் கப்பா குரூப்ஸ் என்ற பெயரைக் கொண்ட அந்நிறுவனத்திற்கு வெனிசுலாவின் போர்ச்சுகீசா மற்றும் லாரா மாகாணத்தின் மத்தியப் பகுதியில் மிகப்பெரிய தைல மரத்தோட்டம் ஒன்று கடந்த வாரம் வரை இருந்தது. ஆம் கடந்த வாரம் வரை தான். இந்த வாரம் அது வெனிசுலா அரசுக்குச் சொந்தமாகிவிட்டது. நாடு முழுவதும் தற்போது மேற்கொண்டு வரும் நிலச்சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வெனிசுலா அரசு இந்த தைல மரத்தோட்டத்தைத் தன் வயப்படுத்தியுள்ளது. "லாரா மற்றும் போர்ச்சுகீசா மாகாணத்தில் இருந்த மிகப்பெரிய அந்த தைல மரத்தோட்டம் பெருமளவில் நீரை உறிஞ்சி விடுகிறது. இதனால் அங்குள்ள பல நதிகள் நீரை இழந்து வருகின்றன," என்று கூறிய வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ், இத்தோட்டத்தில் உள்ள மரங்களை அழித்து வேறு உபயோகமான வழிகளில் பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது என்றார். மேலும் அவ்வாறு அம்மரங்களை அழித்த பின் புதிய பயிர்களை அவ்விடத்தில் விளைவிக்கப்போவதாகவும் கூறினார். ஆம். வெனிசுலாவில் நிலச்சீர்திருத்த நடவடிக்கைகளுடன் சேர்ந்து விவசாயத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளும் துவங்கியுள்ளன. "உண்மையில், நிலச்சீர்திருத்தம் செய்வது தற்போதுள்ள விவசாய அமைப்பையும், நடைமுறைகளையும் மாற்றவே!" என்று வெனிசுலாவின் தேசிய நில நிறுவனத்தின் (ஏநnஉணரநடய'ள சூயவiடியேட ஐளேவவைரவந டிக டயனேள) தலைவர் யான் கார்லோஸ் லோயோ தெரிவித்தார். "விவசாயத்தை சிறுபான்மையினரான தனியாரின் கைகளிலிருந்து பிடுங்கி சமுதாயத்தின் சொத்தாக மாற்றுவது அவசியம். விவசாயம் வெனிசுலா மக்களின் சொத்து, அதாவது பொதுவுடைமை!" என்று முழங்குகிறார் அவர். அவர் தலைமையிலான ஐஎன்டிஐ மற்றும் தேசிய பாதுகாப்புப்படை வீரர்கள் கடந்த திங்களன்று பாரினாஸ் மாகாணத்தில் 2800 ஹெக்டேர் அளவிலான (6 ஆயிரத்து 916 ஏக்கர்) தனியார் நிலங்களைக் கைப்பற்றி அரசுடைமையாக்கியுள்ளனர். இதுவரை அங்கு 5 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான (12,350 ஏக்கர்) நிலங்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்களைக் கைப்பற்றுவது குறித்தும் வெனிசுலா அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. டகாரிகா பள்ளத்தாக்(கூயஉயசபையே எயடடநல) பகுதியில் உள்ள சுமார் 7 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்களை அரசுடைமையாக்குவது குறித்து அந்நாட்டின் விவசாயம் மற்றும் நில வளத்துறை அமைச்சர் எலியாஸ் ஜாவா மற்றும் ஆராகுவா மாநில ஆளுனர் ரபேல் ஐசியா ஆகியோர் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இங்குள்ள நிலம் நல்ல வளமான நிலம் என்றும், ஆனால் பயன்படுத்தப்படாமல் வீணாகக் கிடப்பதாகவும் எலியாஸ் ஜாவா கூறினார். விவசாய கூட்டுப்பண்ணைகளை அமைத்து மண்ணுக்கேற்ற பயிர்களைப் பயிரிடுவது சுற்றுச்சுழலுக்கேற்ற நகரமைப்புத்திட்டங்களை மேற்கொள்வது ஆகியவை அரசின் திட்டங்களாக உள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார். ஆளுனர் ஐசியா இது குறித்து கூறுகையில் சோசலிசப் பாதையில் விவசாயத்தை திருப்புவதே அரசின் நோக்கம் என்றார். உணவு உற்பத்தி மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சி மையம் என்ற ஒரு அரசு நிறுவனத்தை அமைப்பதே வெனிசுலா அரசின் தற்போதைய திட்டமாகும். அரசுடைமையாக்கப்பட்ட நிலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்ததாகவே இந்த மையத்தின் செயல்பாடு இருக்கும். விவசாய உற்பத்தியை உள்ளூர் சமூகத்தின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டுறவு அமைப்பு நிர்வகிக்கும். இந்த கூட்டுப்பண்ணைகள் திட்டம் விவசாயத்தை சோசலிசப் பாதையில் திருப்புவதில் முக்கிய பங்காற்றுவதாகும். நிலத்தை ஏகபோக தனியார் முதலாளிகளிடமிருந்து பிடுங்கும் போது சாவேஸ் அரசு எவ்வித எதிர்ப்புகளையும் பொருட்படுத்துவதில்லை. ஐ.என்.டி.சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிமன்றத்தை அணுகப்போவதாக மிகப்பெரிய எஸ்டேட் ஒன்றின் உரிமையாளரான டோபியாஸ் காரேரோ நகார் என்பவர் கூறியுள்ளார். ஆனால் அரசு சட்டப்படியான நடவடிக்கைதான் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2001ம் ஆண்டின் நிலச்சட்டம் மற்றும் 2008ம் ஆண்டில் போடப்பட்ட உணவுப்பாதுகாப்பு மற்றும் இறையாண்மை சட்டம் ஆகியவை மிகப்பெரிய எஸ்டேட்கள் மற்றும் நிலங்கள் சமூக நலனுக்கு எதிரானது என்று வரையறுக்கின்றன. மேலும் உணவுப்பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய தேவை ஏற்படும் போது அரசு தலையிடலாம் என்றும் அவை கூறுகின்றன. இதைக் கோடிட்டுக் காட்டிய ஐ.என்.டி.ஐயின் தலைவர் லோயோ அரசு தன் கடமையைத்தான் செய்துள்ளது என்று கூறினார். தற்போது லாரா மற்றும் போர்ச்சுகீசா மாகாணங்களில் மேலும் 12 பெரிய எஸ்டேட்களை அரசுடைமையாக்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. 2001ம் ஆண்டில் நிலச்சட்டம் அமலாக்கப்பட்டதைத் தொடர்ந்து இதுவரை 60 ஆயிரம் ஹெக்டேர் நிலம் (1 லட்சத்து 48 ஆயிரத்து 200 ஏக்கர்) வெனிசுலாவின் யாராகுய் மாகாணத்தில் மட்டும் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வேளாண் வர்த்தகம்: தேவை அரசு கண்காணிப்பு!

ந.இராதாகிருஷ்ணன்
விவசாயம் சார் தொழிற்துறை மக்கள் நலனை மனதில் கொள்ளாமல் வெறும் இலாபத்தை மட்டுமே குறியாகக் கொண்டு இயங்கி வருகிறது என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்த ஒன்று. வீரிய ரகப்பயிர்கள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் என்று புதிய, புதிய பெயர்களில் அவர்கள் தங்கள் வர்த்தகத்தை தொடர்ந்து விரிவாக்கி வருகிறார்கள். இந்நிலையில் அமெரிக்காவின் 26 விஞ்ஞானிகள் மற்றும் சில பூச்சியியல் அறிஞர்கள் அந்நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையிடம் அண்மையில் ஒரு அறிக்கை சமர்ப்பித்தனர். தாங்கள் உருவாக்கும் மரபணு மாற்றப்பயிர்களுக்கு வேளாண் வர்த்தக நிறுவனங்கள் அறிவு சார் சொத்துரிமை (யீயவநவே சiபாவள) பெற்று விடுவதால் அந்த ரகப் பயிர்களைத் தங்களால் சுதந்திரமாக ஆய்வு செய்ய முடிவதில்லை என்று அவர்கள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பது இதுதான்: "மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கும் முக்கிய பிரச்சனையான விவசாய ஆராய்ச்சிகளில் அறிவியல் பூர்வமான அணுகுமுறையும் தெளிவான வழிகாட்டுதல்களும் இல்லை. இலாப வெறி கொண்ட பன்னாட்டு உயிரியல் தொழில் நுட்ப நிறுவனங்கள் சிலருக்கு வரைமுறையற்ற அளவில் ஆராய்ச்சிக்கு பண உதவி செய்து தங்களுக்கு விருப்பமான முறையில் பயிர்களை உருவாக்குகின்றன. இவ்வாறு உருவாக்கப்பட்ட ரகங்களில் விஞ்ஞானிகள் சுதந்திரமாக ஆய்வு மேற்கொள்ள முடிவதில்லை. இத்தகு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதன் மூலமே ஒரு ரகம் சிறந்த பலன்களைக் கொண்டதா, மக்களுக்கு நன்மை பயப்பதா என்பதை அறிந்து கொள்ள முடியும். ஆனால் இதற்கு கம்பெனிகள் தொடர்ந்து இடையூறு விளைவித்து வருகின்றன. அதே வேளையில் அக்கம்பெனிகள் அவர்களது கண்டுபிடிப்புகளை பெரும் முன்னேற்ற முள்ளவை என்றும் இலாபகரமானவை என்றும் கூறிக் கொள்கின்றன. போதுமான ஆய்வுகள் நடத்தப்படாமல் ஒரு பயிர் சிறந்தது என்று எப்படித் தீர்மானிக்க முடியும்?" இதுவே அவர்களது கேள்வியாகும். இது உண்மையிலேயே மிகவும் நியாயமான வாதமாகும். பொது சுகாதாரத்துறையில் மருந்து கம்பெனிகளின் தலையீடு மருத்துவர்களிடையே முரண்பட்ட ஆர்வங்களையும், ஒழுங்கீனங்களையும், ஊழலையும் ஏற்படுத்தி இருப்பதை அறிவோம். இதை கட்டுப்படுத்தி பொது மக்களின் ஆரோக்கிய வாழ்வை உறுதி செய்யும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. ஒரு மருந்து நிறுவனம் கண்டறிந்த மருந்தை தர நிர்ணய சோதனைகளுக்கு உட்படுத்தி அதன் பின்னரே மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும். மேலும் தேவையான சமயத்தில் கிடைக்க செய்ய வேண்டிய பொறுப்பும் அதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளும் கடமையும் அரசுக்கு இருக்கிறது. ஏறக்குறைய வேளாண் வர்த்தக நிறுவனங்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் இதே போன்ற நடைமுறைகளைத்தான் அரசு கடைப்பிடிக்க வேண்டும். பல்வேறு தாவர இனங்களை வளர வொட்டாமல் தடுத்து அவைகளின் இருத்தலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் தொழில்நுட்பங்களை வேரறுப்பதும் மக்களுக்கு உணவு உத்தரவாதம் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதும் அவசர அவசியத்தேவையாகும். பன்னாட்டு கம்பெனிகளில் இலாபநோக்கத்தை மேலும் வளர்த்தெடுக்கும் விதத்தில் அறிவியல் ஆய்வுகளை நடத்தி பரிந்துரைகளை வெளியிட்டு வரும் விவசாய பல்கலைக்கழக விஞ்ஞானிகள், விவசாயத்துறை உயர் அதிகாரிகள் மீது தொடர் கண் காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம். பொதுமக்களின் நல வாழ்வுக்கு வேளாண் துறையில் ஏற்படும் புதிய கண்டுபிடிப்புகள் மீது அறிவியல் அறிஞர்கள் சுதந்திரமாக ஆய்வு செய்வது அவசியம். தற்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் குறித்த ஆராய்ச்சிகளுக்கே அதிகளவில் அரசுகள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. ஆனால் அவை உணவுப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதோடு பல்வேறு எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்துபவையாகும். திசு வளர்ப்பு முறை, பல்லுயிர்ப் பாதுகாப்புக்கு உறுதி நல்கும் விவசாய நடைமுறைகள் ஆகியவை மரபணு மாற்றுப் பயிர் வகைகளுக்கு கொடுக்கப்படும் அதீத முக்கியத்துவத்தால் கண்டுகொள்ளாமல் விடப்படுகின்றன. இவற்றுக்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதும் அரசின் இன்றியமையாத கடமையாகும்.

நீங்கள் மட்டுமா; நானும்தான்..!


ஸ்வீடன் நாட்டின் ஃபுருலிக் உயிரியல் பூங்காவில் உள்ள ஒரு சிம்பன்சி குரங்கின் வினோதமான செயல் மனிதனைப் பற்றி விஞ்ஞானிகள் கொண்டிருந்த சில கருத்துக்களை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. சான்டினோ என்ற 31 வயதான அந்த சிம்பன்சி தன்னைக் காண வரும் பார்வையாளர்களை நோக்கிக் கற்களை எறியும் பழக்கத்தைக் கொண்டுள்ளது. பொதுவாக சிம்பன்சி குரங்குகள் கற்களை எறியும் பழக்கத்தைக் கொண்டுள்ளன என்பதால் சான்டினோவின் இச்செயல் வியப்பானதல்ல. ஆனால் கல்லை எறிவதற்காக அக்குரங்கு மேற்கொள்ளும் மற்றொரு நடவடிக்கைதான் ஆச்சரியப்படுத்துவதாகும். பார்வையாளர்கள் மீது எறிவதற்கான கற்களை அக்குரங்கு முன்கூட்டியே சேகரித்து அருகில் குவித்து வைத்துக் கொள்கிறது என்பதுதான் அது. பார்வையாளர்கள் கூட்டத்தை விரும்பாத சான்டினோ பூங்கா திறக்கப்பட்ட சிறிது நேரத்திற்குள்ளாகவே கற்களை வீசத்தொடங்கி விடுமாம். அவ்வாறு வீசுவதற்கான கற்களை பூங்கா மூடியிருக்கும் போது சேகரித்து அருகில் வைத்துக் கொள்கிறது. சிதறிக்கிடக்கும் கற்களை பொறுக்கி எடுப்பதோடு மட்டுமல்லாமல், அருகிலுள்ள கான்கிரீட் தரையை கைகளால் குத்தி அதிலிருந்தும் தேவையான அளவுகளில் கற்களை எடுத்துக் கொள்கிறது என்று பூங்கா ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். பலநாட்கள் ரகசியமாக சான்டினோவின் நடவடிக்கைகளை கண்காணித்ததில் இந்த வியப்பான தகவல் தெரிய வந்துள்ளது. குளிர்காலங்களில் பூங்கா பலநாட்களுக்கு தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் போது சான்டினோ இச்செயல்பாட்டை முற்றிலுமாக நிறுத்தி விடுகிறது என்று மேலும் ஆச்சரியப்படுத்துகிறார்கள் அவர்கள். சான்டினோவின் இந்த வினோத நடவடிக்கையிலிருந்து பார்வையாளர்களைக் காப்பாற்ற வேண்டி பூங்கா ஊழியர்கள் அதன் அருகிலிருந்த கற்களை அப்புறப்படுத்தினார்கள். ஆனால் அதன் பிறகும் சான்டினோ 50 முறை கற்குவியலை உருவாக்கியது. 18 முறை கான்கிரீட் தளத்தைப் பெயர்த்து கற்களை உருவாக்கியது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே ஊகித்து அதற்கேற்ப திட்டங்களை வகுத்து செயல்படும் திறன் மனிதர்களுக்கு மட்டுமே உரியது என்று விஞ்ஞானிகள் இதுவரை கருதி வந்தனர். ஆனால் சான்டினோவின் இச்செயல் விலங்குகளும் கூட எதிர்காலத்திற்காக திட்டமிட்டு அதன்படி செயல்படுகின்றனவோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. "இதுபோன்று முன்கூட்டியே திட்டமிட்டுச் செயல்படுவதற்கு குறிப்பிடத்தக்க அறிவாற்றல் தேவை. எதிர்கால நிகழ்வுகளை முன்கூட்டியே ஊகித்து அறியும் திறனும் இதற்கு வேண்டும். இதுவரை இத்திறன் மனிதர்களுக்கு மட்டுமே உரியது என்றுதான் நினைத்து வந்தோம்," என்கிறார் இந்த ஆய்வுக்குழுவின் தலைவரும், விஞ்ஞானியுமான மத்தியாஸ் ஒஸ்வாத். இந்நிலையில் சான்டினோவைக் கட்டுக்குள் கொண்டு வர அறுவை சிகிச்சை செய்ய உயிரியல் பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது.