Wednesday, September 16, 2009

பிளாஸ்டிக் விற்கும் செஸ் வீராங்கனை!

ஜே.சரண்யா... 14 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று அசத்திய இச்சிறுமி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். சென்னை திருவொற்றியூரில் தனது தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வருகிறார்.
பொதுவாக செஸ் விளையாட்டு பணக்காரர்களுக்கான விளையாட்டு என்று கருதப்படுகிறது. ஆனால் சரண்யா விஷயத்தில் இது தலைகீழாக உள்ளது. அவரது தாய் தங்கம் திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோயில் வாயிலில் பிளாஸ்டிக் மற்றும் மண்ணால் ஆன சிறு பொருட்களை விற்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அவரது தந்தை குடும்பத்தை கைவிட்டுச் சென்று விட்டாராம். அவர் எங்கிருக்கிறார் என்றே எந்தத் தகவலும் இல்லாத நிலையில், தாய் தங்கத்தின் வருமானத்தைக் கொண்டு மட்டுமே குடும்பம் நடந்து வருகிறது. அருகில் உள்ள வேலம்மாள் மெட்ரிக் பள்ளியில் படித்து வரும் சரண்யாவும் அவரது சகோதரியும் விடுமுறை நாட்களில் தாய்க்கு உறுதுணையாக வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அவரது தாய் தங்கம் கூறுவதாவது: "வெள்ளிக்கிழமை மட்டும்தான் கோவிலுக்கு கூட்டம் வரும். அப்போதுதான் நிறைய விற்பனை நடக்கும். மற்ற நாட்களில் மந்தமாகத்தான் இருக்கும். அதுவும் மழைக்காலம் என்றால் வியாபாரம் நடப்பதே அரிது", என்கிறார்.
சரண்யா படித்து வரும் வேலம்மாள் மெட்ரிக் பள்ளி அவரது செஸ் ஆர்வம் காரணமாகவும், குடும்பத்தின் வறுமை நிலை காரணமாகவும் அவருக்கு இலவசக் கல்வியை அளித்து வருவதாக தங்கம் கூறுகிறார். அவரது சகோதரிக்கும் இலவசக் கல்வியை அப்பள்ளி அளித்து வருகிறது. மேலும் வெளிநாட்டுப் பயணங்களுக்கு ஆகும் செலவையும் பெரும்பாலும் பள்ளியே ஏற்றுக் கொள்கிறது என்கிறார் தங்கம். சரண்யாவின் ஆசிரியர்களும் அவருக்கு மிக்க உறுதுணையாக இருக்கின்றனர். போட்டிகள் காரணமாக சரண்யா தவற விடும் வகுப்புகளுக்காக சிறப்பு வகுப்புகளை அவர்கள் எடுக்கின்றனர் என்று நன்றியுடன் கூறுகிறார் அவர்.
"நான் விரைவில் சர்வதேச மாஸ்டர் ஆகிவிடுவேன்", என்று நம்பிக்கையுடன் சரண்யா கூறும் போதும், அவர் மிகப்பெரிய அளவில் சாதிக்க பள்ளியின் உதவி மட்டும் போதாது. அவரை ஸ்பான்சர் செய்ய நல்ல நிறுவனம் வேண்டும் என்று அவரது பயிற்சியாளரான வேலாயுதம் கூறுகிறார். ஏனெனில் சரண்யா சர்வதேச மாஸ்டராக இன்னும் நிறையப் போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது என்கிறார் அவர்.
குடும்பத்தின் வறுமை காரணமாக மிகச்சிறந்த செஸ் வீராங்கனையே தெருவோர வியாபாரியாக மாறும் இந்நாட்டில்தான் கோடிக்கணக்கான டாலர்களில் புரளும் கிரிக்கெட் வீரர்களும் உள்ளனர். அண்மையில் பணக்காரர்களை பட்டியல் போடும் போர்ப்ஸ் இதழில் அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் இடம்பெற்றுள்ளது. இதில் இந்திய கேப்டன் தோனி 1 கோடி டாலருக்கும் அதிகமான ஆண்டு வருமானத்துடன் முதலிடத்தில் உள்ளார். அவரை 17 நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு ஸ்பான்சர் செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலின் முதல் 10 இடங்களுக்குள்ளாக 5 இந்தியர்கள் உள்ளனர். சச்சின்(80 லட்சம் டாலர்கள்-2ம் இடம்), யுவராஜ்(55 லட்சம்-3), டிராவிட்(50லட்சம்-4). சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியும் முதல் பத்து இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 35 லட்சம் டாலர் சம்பாத்தியத்துடன் ஆஸ்திரேலிய கேப்டன் பான்டிங்குடன் இணைந்து 6ம் இடத்தில் உள்ளார்.
கிரிக்கெட் வீரர்கள் இவ்வாறு கோடிகளில் புரண்டு கொண்டிருக்கும் வேளையில், திறமை வாய்ந்த இளம் செஸ் வீராங்கனை ஸ்பான்சர் செய்வதற்கு யாரும் இல்லாமல் தவிப்பது விசித்திர முரணாகும்.

No comments:

Post a Comment