Monday, July 27, 2009

ஆழிப்பேரலையிலிருந்து விடுதலை?



டிசம்பர் 26, 2004.... இத் தேதியை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. ஆம்... அன்றுதான் சுனாமி என்று அழைக்கப்படும் ஆழிப்பேரலையின் சீற்றத்தில் சிக்கி லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இன்னுயிரை இழந்தனர். இந்தோனேஷியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தால் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட அலையே சுனாமியாக மாறி இப்பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.
இயற்கையை மனிதன் முற்றிலுமாக வென்று விடவில்லை என்பதை எடுத்துக்காட்டுவது போன்று சுனாமியின் கோரத்தாண்டவம் இருந்தது. இத்தகைய பேரிடர் ஏற்படப் போவதை விஞ்ஞானிகளால் முன்கூட்டியே சொல்ல முடியவில்லை. சுனாமியால் நிகழ்ந்த இப்பெரும் சோகத்தை விதியின் திருவிளையாடல் என்றும், கடவுளின் கோபம் என்றும் பலர் பலவாறாக கூறிக்கொண்டிருந்தனர். ஆனால் அறிவியல் எப்போதும் போல் சத்தமில்லாமல் தனது கடமையைச் செய்து கொண்டிருந்தது. அறிவியலறிஞர்களின் இடைவிடாத இந்த ஆராய்ச்சியின் பலனாய் தற்போது சுனாமியை முன்கூட்டியே கண்டறிவதில் குறிப்பிடும்படியான தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் செயற்கைக்கோள்களில் பொருத்தப்பட்ட ரேடார் கருவிகளைக் கொண்டே ஏற்படப் போகும் சுனாமியைக் கண்டறியலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
விஞ்ஞானி காடின் என்பவர் தலைமையிலான அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகளால் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் சுனாமி அலை ஏற்படும்போது கடல் நீரின் மேற்பரப்பின் தன்மை மாறி விடும் என்பது கண்டறியப்பட்டது. இதுநாள் வரை சுனாமி அலைகள் ஏற்படுவதை நீரின் தன்மையை வைத்துக் கண்டறிய முடியாது என்று நம்பப்பட்டு வந்தது. ஆனால் அந்த நம்பிக்கையை இந்த ஆய்வு தகர்த்துள்ளது. கடந்த 1994 ம் ஆண்டு ஹவாய் தீவுகளை ஆழிப்பேரலை தாக்கிய போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள், பேரலை ஏற்பட்டபோது கடலில் மிகப்பெரிய நிழல் ஏற்பட்டதைக் காட்டின. இதேபோல் 1996 ம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய சுனாமியின்போது பதிவு செய்யப்பட்ட ஆவணங்களும் ஒருவகையான நிழல் ஏற்பட்டதைக் குறிப்பிட்டிருந்தன. இந்த அம்சத்தை காடின் தலைமையிலான ஆய்வாளர்கள் கூர்ந்து கவனித்தனர். 2004 ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் இதனை அவர்கள் நேரில் உறுதி செய்தனர். இந்த அம்சம் போன்றே கடல் நீரின் தன்மையிலும் அடிப்படையான சில மாறுபாடுகள் ஏற்பட்டதை அவர்கள் கண்டனர்.

"சுனாமியின் முன்னோடி அலை கரையை நோக்கி முன்னேறும்போது கடல் நீரை பெருமளவில் கலக்குகிறது(stir). அப்போது கடல் நீரின் வண்ணம் அடர்த்தியாவதுடன் கடினத்தன்மையும் ஏற்படுகிறது. இந்தக் கடின நீரே அலைக்கு இணையான நிழலை கடலில் ஏற்படுத்துகிறது" என்று தங்கள் ஆய்வுரையில் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிழலின் அளவு ஏற்படும் சுனாமியின் வேகத்தையும் வலிமையையும் பொறுத்தது. இந்த நிழலை விண்வெளியில் சுற்றி வரும் ரேடார் கருவிகளைக் கொண்டு காண முடியும் என்பதால் எதிர்காலத்தில் உயிர்களைக் காக்க இம்முறை பயன்படக்கூடும் என்று அவர்கள் கூறுகின்றனர். "மைக்ரோவேவ் ரேடார்கள் என்று அழைக்கப்படும் நுண்ணலை ரேடார் கருவிகள் புவியைச் சுற்றி வருகின்றன. இவற்றால் பல கிலோமீட்டர் தூரம் பரந்த கடலின் மேற்பரப்பைத் துல்லியமாக கண்டுணர முடியும். கடலின் மேற்பரப்பைக் கண்டறிவதற்கென்றே பிரத்யேக மென்பொருட்களை இவற்றில் உருவாக்குவதன் மூலம் எதிர்காலத்தில் சுனாமியை முன்கூட்டியே எளிதில் கண்டறிய முடியும்,"என்று காடின் கூறுகிறார்.
தற்போதைய நிலையில் சுனாமியை முன்கூட்டியே கண்டறிய இரண்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதில் ஒன்று கடல் நீரின் அழுத்தத்தில் ஏற்படும் மாறுபாடுகளைக்கொண்டு சுனாமியைக் கண்டறிவதாகும். பசிபிக் பெருங்கடல் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இந்த முறையிலேயே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. "டார்ட்"(Deep ocean Assesment and Reporting of Tsunamis)) என்று அழைக்கப்படும் இம்முறையில் பயன்படுத்தப்படும் கருவிகள் கடலில் குறிப்பிட்ட இடங்களில் அமைந்திருக்கும். பசிபிக் பெருங்கடல் முழுவதும் மொத்தம் 39 இடங்களில் இதற்கான மையங்கள் உள்ளன. கடல் நீரில் ஏற்படும் அழுத்த மாறுபாடுகளைக் கணக்கிடும் இக்கருவிகள் சுனாமி ஏற்படும் சிறிது நேரத்திற்கு முன் எச்சரிக்கை விடுக்கும். இந்த முறை துல்லியமான ஒன்று.
மற்றொரு முறை கடல் நீரின் உயரத்தை அளக்கும் கருவிகளைக் கொண்டு(altimeter)
சுனாமியைக் கண்டறிவதாகும். விண்வெளியில் உள்ள சில செயற்கைக்கோள்களில் இதற்கான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த முறை அவ்வளவு துல்லியமானதல்ல என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

Friday, July 24, 2009

இதைக்கூட விட்டு வைக்க மனமில்லை மன்மோகனுக்கு...

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவரும் காலங்களை கவனித்திருப்பீர்கள். முடிவு வெளிவந்து மதிப்பெண் சான்றிதழ்கள் கொடுத்தபின்பு மாணவர்கள் வீட்டுக்குப் போகிறார்களோ இல்லையோ, நேராக வேலைவாய்ப்பு அலுவலகங்களைத் தேடி ஓடுவது தமிழகத்தில் வழக்கமான காட்சியாக உள்ளது. வேலை கிடைக்கிறதா என்பது வேறு விஷயம். பதிவு செய்து கொண்டால் நல்லதுதானே; எப்போதாவது ஒருநாள் உதவும் என்ற எண்ணத்தில் இந்தப்பதிவுகள் செய்யப்படுகின்றன. இதில் குறை கூற எதுவும் இல்லை. நிரந்தர வேலை கிடைக்காதா என்ற ஏக்கமும், பரிதவிப்புமே இதற்குக் காரணம். நிலைமை இவ்வாறு இருக்க, மன்மோகன் அரசு திடீரென வேலைவாய்ப்பகங்களை `நவீன' மயப்படுத்துவது குறித்து யோசிக்க ஆரம்பித்திருக்கிறது. இரு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மத்திய தொழில் மற்றும் வேலைவாய்ப்புத்துறைக்கான இணையமைச்சர் ஹரீஸ் ராவத், இனிமேல் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மாணவர்களுக்கான கலந்தாய்வுக் கூடங்களாகச் செயல்படும் என்று கூறியிருக்கிறார்.
"பல்வேறு துறைகளிலும் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையிலான கலந்தாய்வு மையங்களாக இனிமேல் வேலைவாய்ப்பகங்கள் செயல்படும். இனிமேல் வேலைவாய்ப்பகங்களில் அதிகளவில் கலந்தாய்வுகள்தான் நடைபெறும்", இவ்வாறு கூறியுள்ள அவர், தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களில் பகாசுர நிறுவனமான நௌக்ரி. காம் (சூயரமசi.உடிஅ) உள்ளிட்டவற்றோடு இணைந்து செயல்படும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை என்றிருக்கிறார். அதாவது இந்த `நவீன மயமாக்கும்' பணி அரசு, தனியார் கூட்டுடன் (ஞரடெiஉ-ஞசiஎயவந- ஞயசவநேசளாiயீ) செயல்படுத்தப்படுமாம்.
இது வேலைவாய்ப்பகங்களைத் தனியார் மயப்படுத்துவதற்கான திட்டமேயன்றி வேறல்ல. ஏற்கனவே வேலைவாய்ப்பகங்கள் நலிவடைந்த நிலையில்தான் உள்ளன. தமிழகத்தை எடுத்துக்கொண்டால் கடந்த 1985 ம் ஆண்டு வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்தோர் எண்ணிக்கை 10 லட்சமாக இருந்தது. அப்போது பணியாற்றிய ஊழியர்களின் எண்ணிக்கை 1150 ஆகும். ஆனால் தற்போது வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 65 லட்சம். இது 1985 உடன் ஒப்பிடுகையில் 6.5 மடங்கு அதிகம். ஆனால் தற்போது வேலைவாய்ப்பகங்களில் பணியாற்றுவோர் எண்ணிக்கை வெறும் 528 தான். போதுமான ஊழியர்களை நியமனம் செய்யாமல் நவீனமயப்படுத்துவது குறித்து யோசிப்பது விந்தையாகத்தான் உள்ளது.
இரண்டாவதாக `பலதுறைகளிலும் உள்ள வாய்ப்புகளை' மாணவர்களுக்கு எடுத்துக் கூறும் கலந்தாய்வுக் கூடமாக வேலை வாய்ப்பகங்கள் செயல்படும் என்று அமைச்சர் கூறியிருப்பது, 'வழிகாட்டுதலுடன்' அவற்றின் கடமை முடிந்து விடுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஒரு வேலைவாய்ப்பகம் என்பது வேலையைக் காட்டுவதுடன், அதனைப் பெற்றுத்தருவதாகவும் இருக்க வேண்டும். வேலையை அடையாளம் காட்டுவதுடன் தனது பொறுப்பு கழிந்தது என்று கூறுவதாக இருக்கக் கூடாது.
இதுவரை 4 1/2 கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்துவிட்டுக் காத்திருப்பதாக அமைச்சரே தனது பேட்டியில் கூறியிருக்கிறார். அவர்களுக்கு ஆக்கப்பூர்வமான வகையில் நிரந்தரப்பணியை ஏற்படுத்தித் தருவது குறித்துதான் கவலைப்பட வேண்டுமே தவிர வேறு எதையும் அரசு யோசிக்கக் கூடாது. இதுவரை வேலைவாய்ப்பகங்களில் இலவசமான சேவைதான் வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு, பதிவுமூப்பு குறித்த செய்திகளை மாவட்ட ஆட்சியர்கள் வழங்கும் போது `வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இலவச சேவைதான் வழங்கப்படுகிறது. இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்' என்று கேட்டுக் கொள்வதைக்கூட இதுவரை நாம் கண்டிருக்கிறோம். இந்நிலையில் இதிலும் தனியார் கூட்டை அனுமதித்தால் அது பெரும் கொள்ளைக்கே வழி வகுக்கும். ஒவ்வோராண்டும் பெயர்களைப் பதிவு செய்வதற்காகக் குவியும் இளைஞர்களின் எண்ணிக்கையைப் பார்த்து, அதில் கிடைக்கும் லாபத்தை கணக்குப்போட்டே தனியார் இதில் ஈடுபட முன் வந்திருக்க வேண்டும். அதற்கு அரசும் துணை போவதுதான் வேதனையானதாகும்.

நிதி இல்லையா?
அண்மையில் மாநிலங்களவையில் பேசிய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாததால் நாட்டில் இன்னும் 275 மாவட்டங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை அரசால் துவங்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார். `போதுமான நிதி இல்லை' என்ற வழக்கமான பல்லவியைப் பாடியே இவர்கள் அரசு-தனியார் கூட்டுறவையும், அதன் மூலம் மறைமுகமாக தனியார் மயத்தையும் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அரசின் நிதி வரவைப் பெருக்க ஏராளமான வழி வகைகள் உள்ளன. ஆனால் அதை வேண்டுமென்றே வீணடித்துக் கொண்டு, திரும்பத்திரும்ப தனியார் மயம் வேண்டுமென்று அரசு அடம்பிடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு உதாரணமாக மத்திய பட்ஜெட்டையே எடுத்துக்கொள்ளலாம். அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் (2009-10), வருமான வரி செலுத்துவோருக்கான 10 சதவீத சர்சார்ஜ் நீக்கப்பட்டுள்ளது. இது ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளோருக்கே பலனைத்தருமே தவிர சாதாரண ஏழை மக்களுக்கு இதன் மூலம் எந்த நன்மையும் இல்லை. மேலும் அரசுக்கு இதனால் 10 ஆயிரம் கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்படும். இந்த 10 ஆயிரம் கோடி ரூபாயை இழக்காமல் வசூலித்தால் எதற்காக தனியாருடன் கூட்டு சேருவதைப் பற்றி யோசிக்க வேண்டும்?

Tuesday, July 7, 2009

வரலாறு படைத்தார் ரோஜர் பெடரர்!



சாதனைகள் நிகழ்த்தப்படுவதே முறியடிக்கப்படுவதற்காகத்தான் என்று ஒரு முதுமொழி உண்டு. அந்த வகையில் பீட் சாம்ப்ராஸ் என்ற மகத்தான டென்னிஸ் வீரர் 7 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்த்திய 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் என்ற சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. ரோஜர் பெடரர் என்ற மற்றொரு மகத்தான வீரர் தற்போது 15 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று வரலாறு படைத்துள்ளார்.
123 வது விம்பிள்டன் போட்டியின் இறுதியாட்டத்தில் அமெரிக்க வீரர் ஆண்டி ராடிக்கின் கடுமையான சவாலை 5-7, 7-6 (6), 7-6 (5), 3-6, 16-14 என்ற புள்ளிக்கணக்கில் முறியடித்து இந்த வெற்றி மகுடத்தைச் சூடியுள்ளார் பெடரர்.
சாதாரண வெற்றி பெறுவதற்கே கடும் முயற்சி அவசியம். அப்படியிருக்க, சாதனை வெற்றி பெறுவதென்றால்....? இல்லை. வாத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வகையில் இந்த இறுதியாட்டம் இருந்தது. ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல என்ற வகையில் பெடரரும், ராடிக்கும் விளையாடினார்கள். போட்டியின் பல கட்டங்களில் பெடரரைக் காட்டிலும் ராடிக்கே சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி வரை அவர் தனது சர்வீசையே இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் முதன் முறையாக அவர் இழந்த சர்வீஸ் பெடரரின் வெற்றிப்புள்ளியாக மாறி விட்டது.
ஆட்டத்தின் முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் வென்ற ராடிக், இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்தினார். இருவருமே 6-6 என்று சமநிலையில் இருந்ததால் டை-பிரேக்கர் முறையில் அந்த செட் தீர்மானிக்கப்பட்டது. டைபிரேக்கரில் முதலில் ராடிக்தரான் சிறப்பாக விளையாடினார். பெடரரின் சர்வீஸ்களை எளிதில் முறியடித்த அவர் 6-2 என்று முன்னிலையில் இருந்தார். ஒரு புள்ளி எடுத்திருந்தால் அந்த செட் அவர் கைவசம் வந்திருக்கும் என்ற நிலையில் பெடரர் ஆவேச ஆட்டத்தை வெளிப்படுத்தினார். என்ன நடந்தது என்று மற்றவர்கள் (எதிராளி உட்பட) யோசிக்கும் முன்பாகவே அவர் புள்ளிகளைக் குவித்து, அந்த செட்டைக் கைப்பற்றினார். இதுதான் ஆட்டத்தின் முடிவைத் தீர்மானித்த நிகழ்வாகும். இதன் பிறகு அதே டை-பிரேக்கர் முறையில் 3 வது செட்டையும் கைப்பற்றிய பெடரர் 3-6 என்ற புள்ளிக்கணக்கில் 4 வது செட்டை இழந்தார்.
விம்பிள்டன் போட்டிகளில் இறுதி செட்டான 5 வது செட் டை-பிரேக்கர் முறையில் தீர்மானிக்கப்படுவதில்லை. எனவே, இதில் இருவரும் 6 புள்ளிகளை எடுத்த பின்பும் ஆட்டம் நீண்டு கொண்டே சென்றது. இருவரும் தங்களது சர்வீசை இழக்காமல் இருந்ததால், யார் மற்றவரது சர்வீசை முறியடிக்கிறாரோ அவர் வெற்றி பெறுவார் என்ற நிலை இருந்தது. ஆனால் அது விரைவில் நடைபெறும் சாத்தியக்கூறு இருப்பதாகவே தோன்றவில்லை. 3 1/2 மணி நேரம் விளையாடிய பின்பும் களைப்படையாமல் இருந்த இருவரும் நாட்கணக்கில் கூட விளையாட தாங்கள் தயார் என்பது போல விளையாடிக் கொண்டே இருந்தனர். டெரரைப் பொறுத்தவரை அவரது சர்வீஸ் மிகச்சிறப்பாக இருந்தது. எதிராளியால் தொட முடியாத `ஏஸ்' களை அவர் 50 முறை போட்டார். (விம்பிள்டன் சாதனையை நிகழ்த்தியவர் குரோஷிய வீரர் இவோ கார்லோவிச் - 51 ஏஸ்கள்) எனவே அவர் ராடிக்கின் ஒரு சர்வீஸை முறியடித்தாலே வெற்றி பெற்று விடுவார் என்ற நிலை இருந்தது. கடந்த 2004 மற்றும் 2005 ம் ஆண்டுகளில் பெடரரிடம் விம்பிள்டனை இழந்திருந்த ராடிக் இந்த முறை எப்படியும் வென்று விடுவது என்ற ரீதியில் விடாப்பிடியாக விளையாடினார். மிகச்சிறந்த வீரரான அவர் இதுவரை ஒரே ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைத் தான் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. (யுஎஸ் ஓபன்- ஆண்டு) மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றிந் இறுதியாட்டத்தில் நுழைந்திருந்த சுவர் ஆவேசமாகவும், துடிப்புடனும் விளையாடினார்.
ஆனால் வரலாற்றைத் தள்ளிப்போடும் அவரது முயற்சி பெடரரின் முன்பு நீண்ட நேரம் பலிக்கவில்லை. போட்டியின் 77 வது கேமில் ராடிக் செய்த தவறு பெடரரின் வெற்றிக்குக் காரணமாகியது. இப்போது இல்லாவிட்டால் எப்போதும் இல்லை என்ற ரீதியில் உறுதியுடன் விளையாடிய பெடரர் இறுதியாக வென்றுவிட்டார்.
கடந்த மே மாதம் நடந்த பிரெஞ்ச் ஓபன் போட்டியில் வெற்றி பெற்ற பெடரர் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் ஆனந்தக்கண்ணீர் வடித்தார். ஆனால் இந்த முறை ஒரு பெரிய கடமையை நிறைவேற்றி முடித்த மகிழ்ச்சியும் திருப்தியும் அவரது முகத்தில் தெரிந்தது. ஆனால் வார்த்தைகளில் அதே எளிமை இருந்தது. "இது மிகவும் சந்தோஷமான உணர்வு. ஆனால் நான் சாதனைகளை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக விளையாடவில்லை. ஆனால் அதே வேளையில் இச்சாதனையைப் படைத்திருப்பது சிறப்பானது தான்", இந்த எளிமைதான் அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றுள்ளது. போட்டியைக் காண- தனது சாதனை முறியடிக்கப்படுவதைக்காண கலி போர்னியாவிலிருந்து வந்திருந்த பீட் சாம்ப்ராஸ் பெடரரின் இந்த எளிமையான பண்பைப்பாராட்டினார். "பெடரர் ஒரு பிதாமகன் தற்போது அவர் டென்னிஸ் விளையாட்டின் உருவகமாக மாறியுள்ளார். இப்பொழுதுதான் அவருக்கு வயது 27. எனவே அவர் இன்னும் பலமுறை இங்கும் (விம்பிள்டன்) மற்ற போட்டிகளிலும் வெல்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. 18 அல்லது 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை அவர் வெல்லக்கூடும்," என்றார் சாம்ப்ராஸ்.