Saturday, November 28, 2009

வெள்ளை யானையும் அதன் குட்டியும்!


அவர்கள் இருவரும் அந்த ஊரிலேயே மிகவும் பிரபலமான பொய்யர்கள். ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்ற வகையில் அவர்கள் அவிழ்த்து விடும் பொய்களால் அந்த ஊரே அல்லோலகல்லோலப்பட்டுக்கொண்டிருந்தது.
ஒருநாள் அவர்களில் ஒருவன் ஒன்றுமில்லாத ஒரு வெட்டவெளியைக் காட்டிக் கூறினானாம்: ‘‘அதோ பார் வெள்ளை யானை போகிறது,’’ என்று. சுற்றியிருந்தவர்கள் திருதிரு வென்று விழித்துக் கொண்டிருக்கையிலேயே மற்றவன் கூறினான்: “ஆமாம், ஆமாம் அதன் குட்டியும் போகிறது!’’
இது முன்பொரு காலத்தில் நடந்த கதையல்ல. வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் மீண்டும், மீண்டும் தொடர்ந்து நடந்து வரும் கதைதான். ஆனால் ஒரே ஒரு சின்ன வித்தியாசம்: ஒவ்வொரு முறையும் வெட்டவெளியில் யானைக்கு பதிலாக வேறொன்று தோன்றுகிறது. இந்த முறை தோன்றியிருப்பது ‘லவ் ஜிஹாத்’.
அது என்ன லவ் ஜிஹாத்?
உருது மொழியில் ஜிஹாத் என்றால் போராட்டம் என்று பொருள். இ°லாமிய மதத்தின் இழந்த பெருமையை மீட்பதற்காக போர் செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டு, அம்மதத்தில் உள்ள மிகச்சிலர் செய்யும் வன்முறை வெறியாட்டங்கள் இந்தப்பெயரால் குறிப்பிடப்படுகின்றன. இதனை புனிதப்போர் என்றும் அவர்கள் அழைப்பதுதான் கொடுமையானது. சரி இதற்கும் ‘லவ்’வுக்கும் என்ன சம்பந்தம்? இவை இரண்டையும் ஏன் ஒன்றாக இணைக்க வேண்டும்? இதன் பொருள் என்ன?
இதுபோன்ற கேள்விகளை எழுப்பி யாரும் மண்டையைப் போட்டு உடைத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் இது துவேஷம் கொண்ட இந்துத்துவா கும்பலின் வெறிபிடித்த பழைய கூச்சல்தான். ‘அதிகமாகக் குழந்தைகள் பெற்றுக் கொள்வதன் மூலம் இந்திய இ°லாமியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது’,என்றும், ‘இதன் மூலம் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவை அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்கள்’, என்றும் அவர்கள் செய்து வரும் வக்கிரமான பிரச்சாரம்தான் இப்போது இந்தப் பெயரில் புதிய உருவெடுத்திருக்கிறது. இலாபவெறி கொண்ட ஊடகங்களால் இது ஊதிப் பெரிதாக்கப்படுகிறது: அவ்வளவுதான். இதுவரை இ°லாமியக்குடும்பங்களை இவ்வாறு தூற்றியவர்கள் இப்போது இந்துப்பெண்களுக்கு ஆபத்து என்று கிளம்பியிருக்கிறார்கள்.
அழகான இ°லாமிய இளைஞர்கள் இந்துப்பெண்களை முதலில் காதல் வலையில் வீழ்த்துவார்களாம். பின்னர் அவர்களை மதம் மாற்றி திருமணம் செய்து கொள்வார்களாம். இதன் முக்கிய நோக்கம் இந்தியாவில் இ°லாமியர்களின் தொகையை உயர்த்துவதுதானாம். ஏராளமான குழுக்கள் இந்நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும்,இதற்கு ஏராளமான பணம் செலவிடப்படுவதாகவும் சிறிதும் இடைவெளியின்றி அவர்கள் அடுக்கிக்கொண்டே போகிறார்கள்.
முதலில் இந்த அபத்தம் கேரள பத்திரிகை ஒன்றில் புலனாய்வு என்ற பெயரில் வெளியானதாகத் தெரிகிறது. இதையடுத்து அங்கு இயங்கி வரும் ‘இந்து ஜனஜக்ருதி சமிதி’ என்ற மதவெறி அமைப்பு இதைக் கையில் எடுத்துக்கொண்டது. பின்னர் கர்நாடகத்திலும் இதுபோன்று நடப்பதாகக் கூறி தென் கர்நாடக இந்துத்துவா கும்பல்களும் இதை ஒரு பிரச்சனையாகக் கையிலெடுத்தன. ஆயிரக்கணக்கான இந்துப் பெண்கள் இவ்வாறு இஸ்லாமுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், உடனடியாக அரசு இதில் தலையிட வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். இவர்களின் கோரிக்கையை(?) ஏற்று கேரள, கர்நாடக உயர் நீதிமன்றங்களும் இதுகுறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளன.
இந்நிலையில் இது ஆதாரமற்ற ஒரு வதந்தி என்று கேரள காவல்துறை டி.ஜி.பி மறுப்பு தெரிவித்தார். எந்தப் பெண்ணும் பாதிக்கப்பட்டதாக தகவல் இல்லை என்று அவர் கூறினார். கர்நாடக காவல்துறையும் இது வதந்திதான் என்று தெரிவித்துள்ளது. இதற்கு ஆதாரமாக அவர்கள் சில புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளனர்.
தெற்கு கர்நாடகத்தில் மட்டும் கடந்த சில மாதங்களில் 3 ஆயிரம் இந்துப் பெண்கள் காணாமல் போயுள்ளதாகவும், மாநிலம் முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்றும் இந்து ஜனஜக்ருதி சமிதி தெரிவித்திருந்தது. இதனைச் சுட்டிக்காட்டியுள்ள கர்நாடக காவல்துறை அதிகாரிகள் கடந்த செப்டம்பர் மாத இறுதி வரை காணாமல் போன பெண்கள் வெறும் 404 பேர்தான் என்றும், அதிலும் 332 பேர் கண்டுபிடிக்கப்பட்டு விட்டார்கள் என்றும் கூறியுள்ளனர். இன்னும் 57 பேரின் விவரங்களைத்தான் தேட வேண்டியுள்ளது. இதிலும் இந்து அமைப்புகள் கூறுவது போல் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். மனதுக்குப் பிடித்தவர்களுடன் சேர்ந்து வாழ வீட்டை விட்டுச் சென்ற பெண்களைப் பொறுத்தவரை (1) அவர்கள் இந்துக்கள் அல்லாதோருடனும் சென்றிருக்கிறார்கள், (2) இந்துக்களுடனும் சென்றிருக்கிறார்கள். (3) இந்துப்பெண்களும் காணாமல் போயிருக்கிறார்கள், (4) இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த பெண்களும் காணாமல் போயிருக்கிறார்கள்.
மேலும் இதுபோன்று காணாமல் போன ஒரு பெண் இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு தொடர் கொலைகாரனால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 22 வயதான அப்பெண் அவனால் கொலை செய்யப்பட்ட 27 வது நபர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த ஆதாரங்கள் லவ் ஜிஹாத் என்று இந்து மதவெறியர்கள் கூறிவருவது வெறும் கற்பனையே என்று தெளிவுபடுத்தியுள்ளன. இருந்தும் இதுகுறித்த வழக்குகளை விசாரித்த கேரள, கர்நாடக உயர்நீதிமன்றங்கள் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளன. விசாரிப்பதில் தவறில்லை. ஆனால் இதுபோன்ற மதவெறியர்களின் பொய்மையில் நீதி மயங்கியதால்தான் நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவும் சேதுசமுத்திரத்திட்டம் கூட இன்னும் கனவாகவே நீடிக்கிறது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

Friday, November 27, 2009

ஹங்கேரியில் அம்பேத்கர்!


சுதந்திரம் கிடைத்து 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்ட போதிலும் இந்தியாவில் இன்னும் தீண்டாமைத்தீ அணையவில்லை. கீழவெண்மணிகளும், திண்ணியங்களும், கயர்லாஞ்சிகளும் தீண்டாமைக் கொடுமையின் உச்சகட்டத்தைக் காட்டின. உத்தப்புரங்களும், செட்டிப்புலங்களும் அந்த அவலத்தின் மிச்ச சொச்சங்கள் இன்னும் துடைத்தெறியப்படவில்லை என்பதை உணர்த்துவனவாக உள்ளன. தலித் மக்களின் வாழ்நிலை இன்னும் மோசமாகவே உள்ளது. அவர்களின் வாழ்நிலையை மேம்படுத்துவதற்கான போராட்டங்களும் மார்க்சி°ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் முற்போக்கு சக்திகளால் தீவிரமாக முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.
இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரியில் வாழும் ரோமர்கள்(சுடிஅயள) என்ற ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் உரிமைக்கான போராட்டங்களை அம்பேத்கரிய முறையில் நடத்துவதாகக் கூறுகின்றனர். ஜிப்சி மக்கள் என்று அழைக்கப்படும் ரோமர் இன மக்கள் வட இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்களாவர். ஐரோப்பிய நாடுகளில் இந்திய தலித் மக்களைப் போன்றே கடுமையான ஒடுக்குமுறைகளுக்கும், சுரண்டலுக்கும் இவர்கள் ஆட்பட்டு வருகிறார்கள். பொதுவாக நாடோடி வாழ்க்கைமுறையை மேற்கொண்டிருந்த ரோமர் இன மக்கள் ஐரோப்பாவின் முக்கிய சிறுபான்மையினராவர். உலகம் முழுவதும் சுமார் 1.2 கோடி ரோமர்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் ஐரோப்பாக் கண்டத்தில் மட்டும் 80 லட்சம் பேர் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மிக முக்கிய சிறுபான்மையினராக இருந்த போதிலும் அவர்கள் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளைக் கூட பெற முடியாமல் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். ஆதிக்கம் நிறைந்த ஐரோப்பிய வெள்ளை இனத்தவரின் இன ரீதியான கொடுமைகளும், காரணமற்ற வெறுப்புகளும் தொடர்கதையாக உள்ளதாகக் கூறுகிறார்கள்.
ஹங்கேரி நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ரோமர் இன மக்களின் பங்கு 7 சதவிகிதமாகும். அங்கும் புறக்கணிப்புகளும், ஒடுக்குமுறைகளும் மட்டுமே இவர்களுக்கு பரிசாகக் கிடைக்கின்றன. அந்நாட்டின் சஜோகாசா(ளயதடிமயணய) என்ற கிராமத்தில் வசிக்கும் பாதிப்பேர் ரோமர்கள்தான். ஆனால் அவர்கள் நமது தலித் மக்கள் போன்று கிராமத்தின் வெளிப்பகுதியில் இருக்கும் சேரி போன்ற பகுதிகளில்தான் வசிக்க வேண்டியுள்ளது. மற்ற இனத்தவருடன் சேர்ந்து இல்லாமல் பிரத்யேகக் குடியிருப்புகளிலேயே வசிக்கின்றனர். அந்த குடியிருப்புகளுக்கு அருகில் குடிநீர்க் குழாய்கள் இல்லை; தெருவிளக்குகள் இல்லை; அதேபோல் முறையான சாக்கடை வசதிகளும் இல்லை. ஆனால் அதற்கு அடுத்தாற்போல இருக்கும் ஐரோப்பியக் குடியிருப்புகளில் அனைத்து வசதிகளும் உள்ளன. ஒரு காலத்தில் அருகில் உள்ள சுரங்கங்களில் பெரும்பாலான ரோமர் இன மக்கள் பணியாற்றி வந்ததாகவும், ஆனால் இப்போது யாருக்கும் வேலையில்லை என்றும் அவர்கள் ஆதங்கத்துடன் கூறுகின்றனர். அரசு தரும் சிறிய அளவிலான உதவித்தொகையைக் கொண்டே வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இன்னும் ரோமர் இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் தனி வகுப்பறைகளில் இருந்துதான் கல்வி கற்க வேண்டியுள்ளது. மேலும் பல இடங்களில் அவர்களுக்கு என்று தனிப்பள்ளிகளே இயங்கி வருகின்றன. இந்த தனிப்பள்ளிகளில் உள்ள வசதிகள் பற்றி கூற வேண்டியதில்லை. மற்ற ஐரோப்பியர்கள் படிக்கும் பள்ளிகளுடன் ஒப்பிடுகையில் அவற்றில் வசதி குறைவாகவே உள்ளது. மேலும் அங்குள்ள தேவாலயங்களில் ரோமர்களுக்கு அனுமதியில்லை. இவை அம்மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைப் போக்கில் இந்திய தலித் மக்கள் போன்றே இன்னல்களைச் சந்தித்து வருவதை உணர்த்துவனவாக உள்ளன.
இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அம்மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஹங்கேரி நாடாளுமன்ற உறுப்பினரான டெர்டாக் டைபர் என்பவர் ரோமர் இனத்தைச் சேர்ந்தவராவார். சமூகவியலாளருமான அவர் தங்கள் இன மக்களின் வாழ்நிலையை மாற்றுவதற்கான போராட்டங்களில் முன்னிலையில் இருக்கிறார். தங்கள் இன மக்கள் சந்திக்கும் ஒடுக்குமுறைகள் பற்றி அவர் இவ்வாறு கூறுகிறார்:
“கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஹங்கேரியப் பள்ளிகளில் ரோமர் இன மாணவர்களுக்கு தனி டம்ளர்களும், தட்டுக்களும் இருந்தன. பெரும் போராட்டத்திற்குப் பின்னரே அம்முறை ஒழிக்கப்பட்டது. எங்கள் பிள்ளைகள் இனவெறி காரணமாக தொடர்ச்சியான அவமானங்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும், புறக்கணிப்புக்கும் ஆளாகி வருகின்றனர். மனரீதியில் வளர்ச்சியடையாதவர்கள் என்று கூறி தனிப்பள்ளிகளுக்கு அனுப்பப்படுகின்றனர். ஹங்கேரியில் இயங்கி வரும் இதுபோன்ற தனிப்பள்ளிகளில் பயிலும் 90 சதவிகித மாணவர்கள் ரோமர் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். மாணவர்கள் மட்டுமே புறக்கணிக்கப்படுவதில்லை. கடந்த 2003 ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் ரோமர் இனப் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள தனி பிரசவ வார்டுகளும் (ஜிப்சி ரூம் என்ற பெயரில்) உள்ளன என்பது தெரிய வந்தது’’.
இவ்வாறு கூறும் டைபர் கடந்த 2005 மற்றும் 2007 ம் ஆண்டுகளில் இந்தியா வந்துள்ளதாகக் கூறுகிறார். மகாராஷ்டிர மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்த அவர் இந்திய தலித் மக்களின் நிலையுடன் தங்கள் நிலை ஒத்துப்போவதாகக் கூறுகிறார். மேலும் தலித் மக்களின் விடுதலைக்காக போராடிய அம்பேத்கரின் கொள்கைகள் (குறிப்பாக அம்பேத்கரின் புத்தமதக் கொள்கைகள்) தங்களை ஈர்த்துள்ளதாகவும் கூறுகிறார். இவரும் மற்றொரு ரோமர் இனத் தலைவர் ஓர்சோ° ஜானோ° என்பவரும் தற்போது அம்பேத்கரிய வழியில் தங்களது உரிமைக்கான போராட்டங்களை நடத்தி வருவதாகக் கூறுகின்றனர்.
ரோமர் இன மக்கள் சந்திக்கும் ஒடுக்குமுறைகளின் உச்சகட்டம் ஏற்கனவே பொதுப்புத்தியில் பதிய வைக்கப்பட்ட எண்ணங்களாகும். ஜிப்சி இன மக்கள் குறித்து ஏராளமான வதந்திகள் மற்றும் தவறான கருத்துகள் ஐரோப்பாவில் பரப்பப்பட்டுள்ளன. ரோமர்கள் அல்லது ஜிப்சி மக்கள் என்றாலே அவர்கள் கண்டிப்பாக பிறரை ஏமாற்றுபவர்களாகத்தான் இருப்பார்கள் என்றும், திருடர்கள், வழிப்பறி செய்பவர்கள், நாடோடிகள், பிச்சைக்காரர்கள், அழுக்கான சூழ்நிலையில் வாழும் மக்கள் என்று ஒரு எண்ணம் மக்கள் மத்தியில் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொள்பவர்களுக்கு வழிகாட்டுவதாகக் கூறும் இணையதளங்களும் “ஜிப்சி மக்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்!’’ என்று கூறத் தவறுவதில்லை. இத்தனை இன்னல்களையும் எதிர்த்துப் போராட வேண்டிய கட்டாயத்தில்தான் அவர்கள் உள்ளனர்.
ஆதாரம்: தி இந்து (நவ.22,2009)

விபத்தில்லா போக்குவரத்து!

போக்குவரத்து என்றாலே அதில் விபத்துகள் ஏற்படுவது இயல்பு. சாலையாக இருந்தாலும், ரயில்வே தண்டவாளமாக இருந்தாலும், வான்வெளியாக இருந்தாலும் விபத்துகளின்றி அவற்றை கற்பனை செய்வது அரிது. அதிலும் சாலைகள் விபத்துகளின் உறைவிடமாக உள்ளன. வளர்ந்த நாடுகள் ஓரளவு சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தியுள்ளன என்றாலும், வாகனப்போக்குவரத்து நிறைந்த இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சாலை விபத்துகளால் உயிரிழப்போர் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. எனவே விபத்தில்லா போக்குவரத்து என்றால் கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கும்.
எறும்புகளின் அணிவகுப்பை பொறுமையாக அமர்ந்து எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? அவை எப்படி முட்டல், மோதல் எதுவும் இல்லாமல் ஒரே நேர்கோட்டில் செல்கின்றன? உண்மையில் அவை விபத்தில்லாமல்தான் செல்கின்றனவா? அது எப்படி அவற்றிற்கு சாத்தியமாகிறது? ஒருவேளை அவை போக்குவரத்துக்கு விதிமுறைகள் ஏதாவது வகுத்து அதன்படி செயல்படுகின்றனவா? நமக்கிருக்கும் பரபரப்பான வேலைகளுக்கு மத்தியில் இத்தனையையும் நம்மால் யோசிக்க முடியாதுதான். ஆனால் இதற்கும் மேலான பல்வேறு கேள்விகளுக்கு உயிரியல் ஆர்வலர்கள் விடை கண்டுள்ளனர். அவை வியப்பையும், பிரமிப்பையும் ஏற்படுத்துவனவாக உள்ளன.
எறும்புகள் எதனால் வரிசையாக ஊர்ந்து செல்கின்றன? போக்குவரத்தில் சிக்கல்கள் ஏற்படாமல் அவை செல்லக் காரணம் என்ன? முதல் கேள்விக்கு விடை சொல்வது எளிது. எறும்புகளின் உடலில் சுரக்கும் பெர்மோன்(phermone) என்ற ஒரு வித வேதிப்பொருள் அவை வரிசையாக ஊர்வதை சாத்தியமாக்குகிறது. முன்னால் செல்லும் எறும்பு விட்டுச் செல்லும் அந்த வேதிப்பொருளைப் பின்னால் செல்லும் எறும்புகள் பின்பற்றிச் செல்வதால் அவை நேர்கோட்டில் செல்வது சாத்தியமாகிறது. எனவே இரண்டாவது கேள்விதான் ஆய்வுக்குரியது.
ஒவ்வொரு எறும்புக்கூட்டத்திலும் வேகமாக இயங்கும் எறும்புகள், மெதுவாக இயங்கும் எறும்புகள், சராசரி வேகத்தில் செல்பவை என்று 3 வகைகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அவற்றின் உடல் நீளத்தை வைத்து வேகம் அளவிடப்படுகிறது. மெதுவாகச் செல்பவை வினாடிக்கு 2 உடல் நீள அளவுக்கும், வேகமாகச் செல்பவை வினாடிக்கு 6 முதல் 10 உடல் நீள அளவுக்கும், சராசரி வேகத்தில் செல்பவை 4.7 உடல்நீள அளவுக்கும் செல்கின்றன என்று கூறும் ஆய்வாளர்கள், வரிசை என்று வரும்போது முன்னால் மற்றும் பின்னால் வரும் சக எறும்புகளுக்கேற்ப ஒவ்வொரு எறும்பும் தனது வேகத்தைத் தீர்மானிக்கிறது என்கிறார்கள். எனவே தறிகெட்ட இயக்கம் எதுவும் இல்லாமல் ஒரே சீராக எறும்புகளால் பயணிக்க முடிகிறது. உண்மையில் எறும்புகளின் இந்தப் பண்பு மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டியதாகும். ஏனெனில் சராசரி வேகத்தை பின்பற்றாமல் அதிவேகத்தில் செல்வதால்தான் பெரும்பாலான சாலைவிபத்துகள் நேரிடுகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
புறத்தடைகள் எறும்புகளின் போக்குவரத்தை சீர்குலைக்க முடியுமா? இதையும் விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். சீராகச் செல்லும் ஒரு எறும்பு வரிசையின்-கூட்டில் இருந்து உணவு தேடிச்செல்லும் எறும்புகள், உணவு கொண்டு போகும் எறும்புகள் அடங்கிய வரிசை- இடையில் தடையை வைத்து, மெல்லிய திறப்பு மட்டும் விடப்பட்டது. அப்போது அவை செயல்பட்ட விதம் பிரமிப்பாக இருந்ததாம். ஒரு வரிசைதான் செல்ல முடியும் என்ற நிலையில், ஒரு வரிசை எறும்புகள் அப்படியே திறப்பை விட்டு சற்றுத்தள்ளி நின்று கொண்டனவாம். அதனால் அந்த வரிசை அப்படியே அசையாமல் சிறிது தூரத்திற்கு நீண்டு விட்டதாம். அதே நேரத்தில் எதிர் வரிசை எறும்புகள் போய்க்கொண்டே இருந்தன. பின்னர் சிறிது நேரம் கழித்து, எதிர் வரிசை எறும்புகள் நின்று விட விட்டுக்கொடுத்த எறும்புகள் சென்றனவாம். ஒருவேளை எதிர்வரிசை எறும்புகள் உணவுடன் வந்தால் உணவற்ற எறும்புகள் முழுமையாக அவை செல்லும் வரை பொறுத்திருந்துதான் சென்றன என்று கூறி ஆச்சரியப்படுத்துகிறார்கள் ஆய்வாளர்கள். மேலும் எண்ணிக்கையில் மிக அதிகமாகி விட்டால் அவை மூன்று வரிசையாக பிரிந்து விடும் என்று கூறும் அவர்கள், உணவைப் பாதுகாக்கும் நோக்கில் உணவு கொண்டு வரும் எறும்புகள் நடு வரிசையில்தான் விடப்படும் என்று கூறுகிறார்கள்.
எறும்புகளின் இப்பண்பு சமூக விலங்கியல் (socio biology) என்று அழைக்கப்படுகிறது. சமூகத்தின் நலனுடன் ஒப்பிடுகையில் தனிநபர் நலன் முக்கியமல்ல என்ற நோக்கில் செயல்படுவதே இப்பண்பிற்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.