Friday, May 22, 2009

கொடுமையின் கூடாரமாய் குவாண்டனாமோ சிறை!

அமெரிக்க அரசின் கொடுஞ்சிறையான குவாண்டனாமோவில் நடைபெறும் சித்ரவதைகள், மனித உரிமை மீறல்கள் குறித்து அதிர்ச்சி தரும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் `தீவிரவாதத்திற்கு எதிரான போர்' என்ற பெயரில் நடத்திய பேரழிவுத் தாக்குதல்களின் போது அமெரிக்கப் படையினரால் கைது செய்யப்பட்ட போர்க்கைதிகள் பெரும்பாலானோர் இந்தச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சிறை பற்றி ஏற்கனவே வெளியாகியுள்ள தகவல்கள் உலகில் மிக மோசமான முறையில் மனித உரிமைகள் மீறப்படும் இடம் என்று தெரிவித்தன. மேலும் அமெரிக்க ராணுவதத்தினர் கைதிகளை சித்ரவதைக்கு உள்ளாக்கும் காட்சிகளைக் கொண்ட புகைப்படங்களும் வெளியாகி அதிர்ச்சியளித்தன. இந்நிலையில் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து பாரக் ஒபாமா அதிபராகப் பதவியேற்றார். புஷ் ஆட்சிக் காலத்தில் மிகக் கொடுமையான மனித உரிமை மீறல்கள் அரங்கேறிய இச்சிறையை தான் ஆட்சிக்கு வந்ததும் மூடப்போவதாக ஒபாமா வாக்குறுதி அளித்தார். ஆனால் வாக்குறுதி வாக்குறுதியாகவே நீடிக்கிறது. சிறையை மீட எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் அண்மையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் ராணுவக் கட்டுப்பாட்டிலேயே சிறை தொடர்ந்து நிர்வகிக்கப்படும் என்றும் அதை மீடும் எண்ணமில்லை என்றும் தெரிவித்தார். விதிவிலக்காக சில குறிப்பிட்ட சில கைதிகளுக்கு மட்டும் விடுதலையும், வேறு சிலருக்கு நீதிமன்ற விசாரணையும் அனுமதிக்கப்பட்டது. ஆனால் கைதிகளிடம் ராணுவத்தினர் `விசாரணை'(?) நடத்தியபோது எடுக்கப்பட்ட சுமார் 2 ஆயிரம் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என்று அவர் தடை விதித்து விட்டார். அவை ராணுவத்தினரின் மனித உரிமை மீறல்களை அம்பலமாக்கிவிடும் என்பதால் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குவாண்டனாமோ சிறையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஸ்பெயின் நாட்டின் குழு ஒன்று நடத்திய விசாரணை அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன.
சொல்லவே முடியாத வகையில் சிறைக்கைதிகள் துன்புறுத்தப்படுகின்றனர். அங்கு கடுமையான சித்ரவதைகளை நிறைவேற்றுவதற்கு என்றே ஒரு சிறப்புப்படை உள்ளதாம். ஐ ஆர் எப் (Immediate Reaction Force) என்று அழைக்கப்படும் இப்படையினர் குறித்து இதுவரை எந்தவிதத் தகவல்களும் வெளியே கசிய விடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஊடகங்களும் இது குறித்து வாயே திறக்கவில்லை.
சித்ரவதைகளையும், கொடூரதண்டனைகளையும் நிறைவேற்றுவதற்கென்றே இப்படையினர் சிறப்பாகப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனராம். விசாரணையின் போது சிறிது அலட்சியமாக கைதி பதில் சொல்லி விட்டால் போதும், அதற்காகவே காத்திருந்தது போல் ஐஆர்எப் படையினர் உள் நுழைந்து விடுவார்கள். ஒரு கைதிகள் உடலில் உள்ள பல்வேறு பாகங்களையும் இப்படையில் உள்ள ஒவ்வொருவரும் பரித்துக் கொண்டு அப்பகுதியில் மட்டும் குறிவைத்து அடிப்பார்களாம்.
மேலும் உணவு தராமல், கைதிகளைத் தூங்கவும் விடாமல் இருண்ட பாதாளச் சிறைகளில் அடைத்து துன்புறுத்துவது கைதிகளின் தலையை டாய்லெட் பேசின்களில் வைத்து அழுத்துவது, கூரிய ஆயுதங்களால் கண்களைக் குத்துவது, கைதிகளின் மீது சிறுநீர் கழித்து அவமானப்படுத்துவது என்று அவர்களின் சித்ரவதைகள் நீண்டுகொண்டே போகின்றன. கைதிகளை நாயை விடக் கேவலமாக நடத்துங்கள் என்று ஒரு உத்தரவே அங்கு உள்ளதாம்.
விசாரணையின்போது ஒத்துழைக்காத கைதிகள் என்றில்லை. வேண்டுமென்றே கைதிகளிடம் வம்பு செய்து அதற்கு அவர்கள் சிறிது கோபமானால் கூட உடனடியாக ஐஆர்எப் படையிடம் அனுப்பி விடுவார்களாம். பெரும்பாலும் இஸ்லாம் மதம் குறித்து அவதூறாகப் பேசி கைதிகளைக் கோபமடையச் செய்து பின்னர் துன்புறுத்துவதாக ஸ்பெயின் குழுவின் அறிக்கை கூறுகிறது.
எந்த வித தாமதமும் இன்றி குவாண்டனாமோ சிறையை மூடுவதே இக்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

Wednesday, May 20, 2009

தேனீக்கள் தேனை உறிஞ்சுவது எப்படி?ஆய்வில் புதிய தகவல்கள்




மலர்களில் இருந்து தேனீக்கள் எவ்வாறு தேனைச் சேகரிக்கின்றன என்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் பல ஆச்சரியமான தகவல்கள் கிடைத்துள்ளன.
மலர்களில் எவ்வாறு தேனீக்கள் அமர்கின்றன என்பது இந்த ஆய்வின் முக்கிய அம்சமாகும். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி பிவர்லி க்ளோவர் என்பவர் தலைமையிலான ஆய்வுக்குழுவினர் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டனர். இதில் மலர்களின் இதழ்களில் உள்ள செல்களின் அமைப்பு தேனீக்கள் தேனை உறிஞ்ச மிகவும் உதவுவதாகத் தெரியவந்துள்ளது. மலர்களின் இதழ்களில் கூம்பு வடிவிலான செல்கள், தட்டையான செல்கள் என இருவகை செல்கள் காணப்படுகின்றன. இவற்றில் கூம்பு வடிவ செல்கள் சிறிது சொரசொரப்பான மேற்பரப்பைக் கொண்டுள்ளன. எனவே தேனீக்கள் இச்செல்களின் மீது அமரும்போது தடுமாற்றம் இன்றி உறுதியாக அமர முடிகிறது. இதில் வியப்பான தகவல் என்னவென்றால் தேனீக்களின் கால்களின் அமைப்பு கூம்பு வடிவச் செல்களில் அமர்வதற்கேற்ப தகவமைக்கப்பட்டுள்ளதாம்! அதாவது தேனீ இச்செல்களின் மீது அமரும் போது ஏறக்குறைய ஒட்டிக் கொள்கிறது. இது பைகளை மூடுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் சொர சொரப்பான மற்றும் பஞ்சு போன்ற அமைப்பை (ஏநடஉசடி) ஒத்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஆனால் தட்டைச் செல்கள் வழுக்கும் தன்மையுடையவை. இவற்றில் அமர பெரும்பாலும் தேனீக்கள் விரும்புவதில்லை. விஞ்ஞானிகளின் இந்த ஆய்வில் ஒரு வகை ரெசினால் செய்யப்பட்ட செயற்கை மலர்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் கூம்பு வடிவ செல்களும், தட்டை செல்களும் மலர்களில் உள்ளது போலவே அமைக்கப்பட்டிருந்தன. பின்னர் தேனீக்களை அப்பகுதியில் விட்டு ஆய்வு நடத்தப்பட்டது. தேனீக்கள் என்ன செய்கின்றன என்பது அதிவேக வீடியோவில் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டது.
பூக்கள் சாய்வாக இல்லாமல் நேரான நிலையில் வைக்கப்பட்டிருந்த போது தேனீக்கள் இருவகை மலர்களிலும் சரிசமமாக அமர்ந்தன. தட்டைச் செல்களைப்பற்றியோ, கூம்பு வடிவ செல்களைப் பற்றியோ அவை கவலை கொள்ளவில்லை. ஆனால் பூக்களின் கோணம் மாற்றப்பட்டு சாய்வாக வைக்கப்பட்டபோது கூம்பு வடிவ செல்களை உடைய பூக்களில் அமர்வதையே தேனீக்கள் விரும்பின. 74 சதவீதம் அவை கூம்பு செல்களிலேயே அமர்ந்தன.
தேனீக்கள் தட்டைச் செல்களை உடைய மலர்களில் அமரும்போது மிகவும் தடுமாறினவாம். அது பனிக்கட்டிகளில் வீரர்கள் ஸ்கேட்டிங் செய்வதைப் பார்ப்பது போன்று இருப்பது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தேன் சேகரிப்பது உண்மையில் கடினமான பணி என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இயற்கை அதிக சிரமத்தை அவற்றுக்குக் கொடுப்பதில்லை. உலகில் உள்ள மலர்களில் சுமார் 80 சதவீத மலர்கள் கூம்பு வடிவ செல்களைக் கொண்டிருக்கின்றன. தேனீக்கள் மட்டுமல்ல பட்டாம்பூச்சிகள், வண்டுகள் உள்ளிட்ட மற்ற பூச்சியினங்களும் இதேபோல்தான் தேன் உறிஞ்சுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சிந்துவெளி மக்களின் மொழி!




சிந்துச்சமவெளி நாகரிகம் ஆரியர்களுடையது என்று காவிக் கூட்டம் சர்ச்சைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில், அது திராவிடர் நாகரிகமே என்பதைப் பறைசாற்றும் பல்வேறு ஆதாரங்கள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தற்போது சிந்துச் சமவெளி நாகரிக மக்கள் பயன்படுத்திய குறியீடுகள், எழுத்துருக்கள் குறித்து புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.
சிந்துச் சமவெளி நாகரிக மக்கள் பயன்படுத்தியவை வெறும் குறியீடுகள் மட்டுமே என்றும், அவற்றில் ஒரு மொழிக்குரிய கட்டமைப்பு இல்லை என்றும் சிலர் வாதாடி வந்தனர். அக்குறியீடுகளை இதுவரை யாரும் விளக்கிச் சொல்லாதது அவர்களது வாதத்திற்குச் சாதகமாக இருந்தது. ஆனால் தற்போது நடத்தப்பட்டுள்ள ஒரு ஆய்வு அவர்களது வாதங்களைத் தவிடு பொடியாக்கியுள்ளது. சிந்துச்சமவெளி மக்கள் பயன்படுத்திய குறியீடுகள் மொழிக்கான அடிப்படைக்கட்டமைப்பைக் கொண்டிருக்கின்றன என்று அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அத்துடன் அந்த மொழியும், ஆதிகாலத் தமிழ் மொழி வடிவத்தோடு பலவகைகளில் ஒத்துப்போகிறது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதனால் சிந்துச்சமவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகமே என்பது மீண்டும் ஒருமுறை அழுத்தமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் பல்கலைக்கழக கணினி அறிவியலாளர் ராஜேஷ் பி.என்.ராவ், மும்பை டாடா அடிப்படை ஆய்வு மையத்தைச் சேர்ந்த வானியல் துறை வல்லுனர்கள் நிஷாயாதவ்மற்றும் மாயங்க் என்.வாஹியா, மும்பையைச் சேர்ந்த மென்பொருள் வல்லுனர் ரிஷிகேஷ் ஜோக்லேகர், சென்னை கணித அறிவியல் நிறுவனத்தின் ரோனோஜோய் அதிகாரி மற்றும் சென்னையில் உள்ள சிந்துவெளி நாகரிக ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஜராவதம் மகாதேவன் ஆகியோர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். நவீன புள்ளியியல் முறைகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சிந்துச் சமவெளி எழுத்துருக்கள் பல்வேறு மொழி வடிவங்களோடு ஒப்பீடு செய்யப்பட்டன. சுமேரிய சித்திர எழுத்துருக்கள், ஆதிகால தமிழ் எழுத்துருக்கள், சமஸ்கிருத எழுத்துருக்கள், ஆங்கில வார்த்தைகள் மற்றும் ஆங்கில எழுத்துக்கள் ஆகியவற்றோடு சிந்து எழுத்துக்கள் ஒப்பிடப்பட்டன. எழுத்துக்களின் கோர்வையில் உள்ள ஒழுங்கற்ற தன்மை (entropy)குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வை இன்னும் துல்லியப்படுத்தும் நோக்கில் தற்போது நடைமுறையில் இருக்கும் மொழிகள் அல்லாத சில வடிவங்களோடும் (மனித டி.என்.ஏ.குறியீடுகள், பாக்டீரியாவின் புரதக்குறியீடுகள், ஃபோர்ட்ரான் என்ற கணினி மொழி ஆகியவை) சிந்து எழுத்துக்கள் ஒப்பிடப்பட்டன.
இந்த ஆய்வின் முடிவில் சிந்து எழுத்துக்கள் மொழிக்கான கட்டமைப்பைக் கொண்டுள்ளன என்பது உறுதியானது. மேலும் மற்ற மொழி வடிவங்களைக் காட்டிலும் ஆதிகால தமிழ் மொழியின் எழுத்துருக்களோடு அவை மிகவும் பொருந்திப் போகின்றன என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இது சிந்துச்சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்பதை உறுதிப்படுத்துவதாக ஆய்வு மேற்கொண்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆய்வு முடிவுகள் அண்மையில் `சயின்ஸ்' அறிவியல் இதழில் வெளியிடப்பட்டன. சிந்துவெளி நாகரிக எழுத்துக்களைப் பற்றி தற்போது பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் இது குறித்து இன்னும் பல உண்மைகள் வெளிவரக்கூடும்.
இரா.நந்தகுமார்