Friday, December 12, 2008

உண்ட மயக்கம்...

'உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு` என்பது பழமொழி. மதிய உணவுக்குப் பின்னர் சிறிது நேரம் உறங்குவது அனைவராலும் ஒருகாலத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று, அவசரகதியில் இயங்கும் வாழ்க்கை முறையால் பகல் தூக்கம் என்பதைப் பலரால் எண்ணிக்கூடப் பார்க்க முடிவதில்லை. இன்னும் சிலர் பகலில் தூங்குவது ஒரு கெட்ட பழக்கம் என்றும், சோம்பேறித்தனம் என்றும் கூட நினைக்கிறார்கள். ஆனால் பகல் தூக்கத்தைப் பற்றி நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் பல ஆச்சரியமான உண்மைகள் வெளிவந்துள்ளன. ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் பொது சுகாதாரத் துறையால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பகல் தூக்கம் இதய நோய் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது என்று தெரிய வந்துள்ளது. மொத்தம் 23 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு முடிவில் பகல் தூக்கம் மாரடைப்பு மற்றும் இதர இதயநோய்கள் ஏற்படாமல் காக்கிறது என்று தெரியவந்துள்ளது. கட்டுப்பாடான உணவு அல்லது உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பலன்களை விட பகலில் தூங்குவது அதிக பலன்களைக் கொடுக்கிறதாம்! அதற்காக தினமும் தூங்க வேண்டியதில்லை. ஒரு வாரத்தில் குறைந்தது 3 நாட்கள் (ஒவ்வொரு நாளும் குறைந்தது அரை மணி நேரம்) தூங்கினாலே போதுமானது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்த வகையைச் சேர்ந்தவர்களுக்கு இதயநோய் ஏற்படுவது தூங்காதவர்களைக் காட்டிலும் 37 சதவீதம் குறைவு என்கிறார்கள் அவர்கள். கிரேக்கர்களுக்கு பகலில் தூங்கும் பழக்கம் உள்ளது. தினமும் குறைந்தது 30 நிமிடமாவது அவர்கள் பகலில் தூங்குகின்றனர். இவர்களுடன் அமெரிக்க, வடக்கு ஐரோப்பிய மக்களை ஒப்பிட்டே இந்த ஆய்வு செய்யப்பட்டது. பகல் தூக்கத்திற்கும், உடல் நலத்திற்கும் இடையேயுள்ள தொடர்புகளை விளக்கியுள்ள ஆய்வுகளிலேயே இதுதான் மிகப்பெரிய ஆய்வாகும். பணி ஓய்வு பெற்றவர்களைக் காட்டிலும், வேலை செய்பவர்களுக்கே பகல் தூக்கம் பலன் கொடுக்கிறது என்பது இந்த ஆய்வில் கிடைத்த மற்றொரு சுவாரஸ்யமான தகவலாகும். பொதுவாக பகலில் சிறிதுநேரம் தூங்குவது என்பது மன அழுத்தத்தைக் குறைக்கும்; இதயத்துடிப்பையும், இரத்த ஓட்டத்தையும் சீராக்கி, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் கட்டுக்குள் வைக்கும்/ எல்லாவற்றுக்கும் மேலாக, நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கச் செய்யும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment